
ஜோதிகா என்ற பெயரில் எப்படி வெளிச்சம் என்ற ஒரு பொருள் உள்ளதோ அதேபோல் அவர் நடித்துள்ள பெரும்பாலான படங்களும் பெரும் வெளிச்சத்தை எட்டி இருக்கின்றன.
குறிப்பாக அவர் திருமணத்திற்குப் பின் கதையின் நாயகியாக வலம் வந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல பெயரையும் நல்ல லாபத்தையும் சம்பாதித்து இருக்கின்றன.
அந்த வரிசையில் ஜோதிகா நடித்து 2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து கல்யாண் இயக்கியுள்ள புதியபடமும் இணையும் என்று தெரிகிறது.
சென்னையில் நடிகர் சூர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று சிறப்பாக முடிந்திருக்கிறது.
படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே குலேபகாவலி படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இந்தப்படமும் காமெடியை அடித்தளமாக கொண்டது தான். மேலும் நடிகர் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருப்பதால் நிச்சயம் ஒரு நல்ல மெசேஸ் இருக்கும் என்றும் நம்பலாம்.
இன்னும் பெயரிப்படாத இப்படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் இசை அமைத்துள்ளார். படத்தின் எடிட்டர் விஜய். இப்படத்தில் தயாரிப்பாளர் சூர்யாவோடு இணை தயாரிப்பாளராக இராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்துள்ளார்.
சென்னை பின்னி மில்லில் பாடல் காட்சிகள் படம் பிடிக்கப் பட்டதோடு மொத்தம் 35 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் திருப்திகரமாக முடித்திருக்கிறார்கள்.