அமரர் என்.டி.ராமாராவின் கிருஷ்ணர் வேடம்தான் அவரை ரசிகர்கள் ‘தேவுடு’ என கொண்டாட வைத்தது. அவரை கிருஷ்ணராகவே மதித்து வணங்கினார்கள்.
அவருக்குப் பிறகு யார் கடவுள் வேடம் போட்டாலும் ரசிகர்களைக் கவரவில்லை.
தமிழ்ச்சினிமாவில் கடவுள் வேடங்கள் போடுவதற்கு அந்த காலத்தில் பி.வி.நரசிம்மபாரதி,பி.எஸ்.கோவிந்தன் என இருவர் இருந்தார்கள். அதன் பின்னர் சிவகுமார் மட்டுமே முருகனாக மதிக்கப்பட்டார்.
அவருக்குப் பின்னர் இதுவரை யாரும் கடவுள் வேடம் போடுவதற்கு துணிவதில்லை. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மட்டுமே அம்மன் வேடங்களுக்கு பொருத்தமாக விளங்கினார்,
ஆந்திராவில் படமெடுத்தவர்கள் சீதையாக நயன்தாராவை நடிக்க வைத்தார்கள்.
இதில் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது.
நடிகர் சிம்புவுடனான காதல் அத்தியாயத்துக்குப் பிறகு பின், நயன்தாரா நடிகர் பிரபுதேவாவுடனான புதிய காதல் அத்தியாயத்தை தொடங்கினார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்தார்.
இப்படமே தனது கடைசிப் படம் என கூறிவந்த நயன், நடிகர் பிரபுதேவாவை விட்டு பிரிய நேர்ந்தது.
மீண்டும் சினிமா!
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தனது புதிய காதலராக இயக்குநர் விக்னேஷ் சிவனை அறிவித்தார்.
‘லிவிங் டு கெதர்’ பாணியில் வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில்,தற்போது நயன்தாரா, ராமாயண காவியம் படத்தில் மீண்டும் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராதாரவி என்ன சொல்லப்போகிறாரோ?
தங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து இந்த த்ரி டி படத்தை இயக்க உள்ளனர். ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது.
ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த ராமாயணம் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. இதன் முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.