வாய்த்துடுக்கு எப்போது வாய்க்காலாக மாறியது என்பது தெரியவில்லை.
கங்கனா ரனாவத் எப்போதுமே பிரச்னைக்குரிய நடிகைதான் என்பார்கள்.
பிரச்னைக்குரிய நடிகையை ,பிரச்னைக்குரிய நடிகை-தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இயக்குநர் ஏஎல் விஜய் தேர்வு செய்திருப்பது பொருத்தமானதுதான்.!
ஜான்சிராணி பயோபிக் படத்தில் நடித்த பிறகு அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது.
அது நாளடைவில் பிளவுபடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
விமர்சனம் என்பது பூச்சொரிதல் இல்லை என்பதை அனைவருமே அறிந்திருப்பார்கள். தவறுகளை மென்மையாகத் தட்டுவதும் வன்மையாகத் தட்டுவதும் அந்தந்த பிரச்னைகளை பொருத்தது.
யாரும் கல் எறிவதில்லை. ஏறிகிறவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருப்பார்கள். போகிறபோக்கில் டிவிட்டரில் நாலு எழுத்தைத் தட்டிவிட்டுப் போகிறவனெல்லாம் பொறுப்புள்ளவன் என நினைப்பது தவறு. மலம் தொட்டு எழுதுகிறவர்களை பத்திரிகையாளர்களுடன் இணைத்துப் பேசுவது மன்னிக்க முடியாத தவறு.
அந்த மாபெரும் குற்றத்தைத்தான் மணிகர்ணிகா நடிகை கங்கனா ரனாவத் செய்திருக்கிறார்.தனிப்பட்ட ஒருவர மீதுள்ள கோபத்தை மொத்த பத்திரிகையாள சமூகத்தின் மீது காட்டியிருப்பது மாபெரும் குற்றம்.
“பத்திரிகையாளர்கள் கரையான்கள்.போலி தாராளவாதிகள், துரோகிகள்,சாப்பிடுவதற்காகவே பிரஸ் கான்பரன்ஸ் வருகிறவர்கள்” என இழித்துப் பழித்திருக்கிறார்.
“மன்னிப்புக் கேட்கவேண்டும் “என்று மும்பை பத்திரிகையாளர்கள் போராடி வருகிறார்கள்.