தி.மு.கழகத்தின் தலைமைக்கழகம் சென்னை அண்ணாசாலையில் இருப்பது ஊர் ,உலகத்துக்குத் தெரியும். பொதுவாக அரசியலில் மாற்றமோ ,அதிர்வோ எது நடந்தாலும் அதற்கு மதுரைதான் மையமாக இருக்கும் .
அப்படி இருக்குமோ என்கிற அதிர்வலைகளை மதுரையில் ஒட்டப்பட்ட விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வரலாம் என்கிற நிலை நெடுங்காலமாகவே இருக்கிறது. ஆளும் கட்சியான அதிமுகவும் அதனுடைய கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் விஜய்யின் வளர்ச்சியை அறவே விரும்பவில்லை. ஆளுவோரை தனது படத்தில் வசனங்கள் வழியாக பங்க்சர் பண்ணி வருவதும் நடக்கவே செய்கிறது.
இந்த நிலையில்தான் ‘தளபதியின் அறிவாலயமே ‘ என மதுரையில் பெரிய பெரிய போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள்.அறிவாலயம் செல்லப்போகிறார் விஜய். அதைத்தான் முன்னதாகவே ஜாடையாக சொல்லிவிட்டார்கள் என சிலர் கருதுகிறார்கள்.தளபதி என்பது முதலில் ஸ்டாலினைத்தான் குறிக்கும் .பின்னர்தான் அந்த பெயரை விஜய் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
“திமுகழகத்தின் நிரந்தர தளபதி நான்தான், நிரந்தர போர் வாள் வைகோ ” என்று சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலினே சொன்னது நினைவில் வைக்கவேண்டியது.
சுவரொட்டி ஒட்டியதற்காக போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.