சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே “பப்பி”. வரும் வாரம் அக்டோபர் 11ம் தேதி படம் வெளியாகிறது.
தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பேசுகையில் “வேல்ஸ் ஃபிலிம்ஸ்ஸின் மூன்றாவது படம் “பப்பி”. கடந்த இரண்டு படங்களை போல இந்தப்படமும் பெரு வெற்றி பெறும். காலேஜ் செல்லும் இளைஞர்களுக்காகவே எடுத்திருக்கும் படம். அவர்கள் ரசிக்கும் படி இருக்கும். தரணின் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. பாடல்கள் அனைத்தும் பிரபலங்கள் பாடியுள்ளார்கள். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் நல்ல படங்களை தருவதே எங்கள் நோக்கம். இந்தப்படத்தை அடுத்து ஜீவா நடிப்பில் சீர் படம் வர இருக்கிறது. “பப்பி” படத்தில் வருண் நாயகனாக காலேஜ் செல்லும் மாணவர்களுக்கு பிடித்த மாதிரி நடித்துள்ளார். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். எல்லோருக்கும் நன்றி என்றார்.இசையமைப்பாளர் தருண் பேசியபோது “இந்தப்படம் எனக்கு ஒரு ஃபேமிலி புராஜக்ட் மாதிரி இருந்தது. அஸ்வின், வருணை சிறு வயதில் இருந்தே தெரியும். இந்தப் படத்தில் வருண் மிக எனர்ஜியுடன் இருந்தார். ஒரு புதுமுகமாக அட்டகாசமான நடிப்பை தந்துள்ளார். இயக்குநர் மிகவும் திறமையானவர் அவருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். ஹிரோயின் நேரில் பயங்கர கலகலப்பானவர், ஆனால் படத்தில் ரொம்பவும் அடக்கமான ரோலில் நடித்துள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது. கௌதம் சார் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அனிருத், ஆர் ஜே பாலாஜி, யுவன் சங்கர் ராஜா ஆகிய அனைவரும் பாடல் பாடியுள்ளார்கள். என்னை மதித்து பாடல் பாடியதற்கு நன்றி.”என்றார்.நாயகன் வருண் பேசுகையில் “என்னை சின்ன,சின்ன கேரக்டரில் பார்த்திருப்பீங்க, பப்பி படக்கதை கேட்டபோதே நாம் நாயகனாக நடிக்க இதுவே சரியான கதை என்று தோன்றியது. இது என் வாழ்க்கையை, இளைஞர்களை பிரதிபலிக்கும் கதையாக இருந்தது. டிரெய்லரில் அடல்ட் மூவி மாதிரி இருக்கும் ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கும் க்யூட் லவ் மூவியாக இருக்கும். இதில் காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமே இருக்கிறது. இயக்குநர் மிகவும் திறமையானவர் அவர் செய்வதில் பாதியை செய்தாலே போதும். இந்தப்படத்தில் ரசித்து ரசித்து வேலை பார்த்துள்ளேன். இந்தப்படத்தில் 6 நிமிடக் காட்சி ஒன்று உள்ளது அது கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன். சம்யுக்தா வேறு ஒரு படத்திற்காகத்தான் முதலில் வந்தார். மிக நெருங்கிய நண்பராக மாறிவிட்டார். அவருடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. இயக்குநர் அதை உடைத்து நன்றாக எடுத்திருக்கிறார். யோகிபாபுவுடன் முதல் இரண்டு நாட்கள் நடிக்க தயக்கமாக இருந்தது. அதன் பிறகு மிகவும் நெருக்கமாகி விட்டார். இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன். இளைஞர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் நன்றி. கனவிலேயே வாழும் அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் இந்தப்படம் சமர்ப்பணம் என்றார்.இயக்குநர் மொரட்டு சிங்கிள் பேசியபோது ”
இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமான மேடை. 7 வருடங்களுக்கு முன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது மேடையேறி இருக்கிறேன். என் அப்பா அம்மா எனக்கு அனைத்தையும் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வெற்றியை சமர்பிக்கிறேன். காக்கா முட்டை மணிகண்டன் சாரிடம் வேலை பார்த்த போது படத்தின் திரைக்கதையை நகல் எடுக்க எங்களிடம் காசு இல்லை. அவர் உண்டியலை உடைத்து தான் நகல் எடுத்தோம். தான் செய்வது சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர். அந்தப்படம் இன்று இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. அவரது பெயரைக் கெடுப்பது போல் இந்தப்படம் இருக்காது. இது A படம் கிடையாது இது U படம். தயரிப்பாளர் ஒரு தந்தையை போல் தான் இருந்தார். அவரது கனவை நான் நிறைவேற்றி இருக்கிறேன். யோகிபாபுவை காக்கா முட்டை படத்திலிருந்தே தெரியும். இன்று அவர் இருக்கும் உயரம் அவருக்கு தகுதியான இடம். அவர் எனக்காக இந்தப்படம் செய்துள்ளார். வருண் இந்தப்படத்தில் தன் முழுத்திறமையையும் தந்துள்ளார். சம்யுக்தாவை இந்தப்படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார்.