“ஜனனி ..ஜனனி ..ஜெகம் நீ ,அகம் நீ !ஜகத் காரணி நீ !பரிபூரணி நீ!”
இந்தப்பாடல் இசைஞானி இளையராஜாவின் இசைக்குடிலில் ,அதாவது பிரசாத் ஸ்டுடியோவில் உருவாகவில்லை.
உஸ்மான் சாலையில் இளையராஜா குடியிருந்த வாடகை இல்லத்தில் பிரசவிக்கப்பட்டது.
மாலையில் குளித்து விட்டு பூஜை அறையில் சற்று தியானித்துவிட்டு வெளியில் வந்தபோது ஆதிசங்கரரின் படம் பார்வையில் பட்டது.
“குருவே! நீங்க என் பாட்டில் வர்றீங்க” என சொல்லிவிட்டு கம்போசிங்கிற்காக உட்கார்ந்தார் , ராஜா.
டைரக்டர் கே. சங்கர், கவிஞர் வாலி ,தபலா கண்ணன் ( சரிதானா ?நினைவில் இந்தப் பெயர்தான் இருக்கிறது. ) ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். தாய் மூகாம்பிகை படத்துக்கான கம்போசிங்க்தான் அது.
மெட்டு ரெடி.ஆனால் ராஜாவுக்கு குழப்பம்.
டைரக்டர் சொன்ன சிச்சுவேஷன் ஆதி சங்கரரே பாடுவதாக! ஆனால் வந்திருக்கிற மெட்டோ ஒரு வித்துவான் பாடுவதைப் போல!
“சரியில்லையே!” என மறுபடியும் ஆதி சங்கரரை நினைத்துக் கொண்டு ஆர்மோனியத்தின் கட்டைகளை அழுத்துகிறார்.
அருவியாக கொட்டுகிறது மெட்டு!
வாலியின் கரங்களில் வாணி அமர்ந்து கொள்கிறாள். அற்புதமாக வந்து விட்டது பாடல்.
“இன்றே ரிக்கார்டிங்கை வைத்துக் கொள்வோம்!”
“ஜேசுதாஸ் இல்லையே சுவாமி”என்கிறார் சங்கர்.
“அதற்கென்ன நானே பாடி விடுகிறேன் ” என்கிறார் ஞானி. “அவர் வந்ததும் மிக்சிங் பண்ணிவிடலாம்!”
ஆனால் மறுநாளும் ஜேசுதாஸ் வரவில்லை. ராஜாவின் குரலே பாடலாகி விட்டது.
இன்று வரை ஞாலம் போற்றுகிற பாடல் அது.
பிரசாத் இசைக்குடிலை விட்டு வெளியே பதிவான பாடல் அது.
என்றாலும் ஒரு தபஸ்வியின் குடிலில் எத்தனை பாடல்கள் ,எவ்வவு சாதனைகள்,நடந்தேறி இருக்கின்றன. இசைக் குடிலுக்கு எத்தனை பாடக,பாடகியர் பாடலாசிரியர்கள் இசை மேதைகள் வந்து சென்றிருக்கிறார்கள்.
பல வருடங்களாக வாழ்ந்த அந்த இசைக்குடிலை இழுத்து மூடுவதென்றால் எத்தகைய கொடிய நெஞ்சம் இருந்திருக்கிறது எல்.வி.பிரசாத் வாரிசுகளுக்கு!
இசை ஞானி அந்தப் பக்கம் வரவே இல்லை. வலி இருக்கும் அல்லவா! ஆனால் அந்த ஞானியின் இசையினால் பலன் பெற்றவர்கள் ,தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இசை அமைப்பாளர்கள் சங்கமும் இருக்கவே செய்கிறது.
ஆனாலும் வாயில் பெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதுதான் தமிழர்கள் பண்பா?
வெட்கமாக இருக்கிறது!