இளைஞர்களின் இதயங்களை ஒரு வகையாக கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் .ரசிகர்கள் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. இப்படம் வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்திருந்த விக்ரம்-துருவ்வை பார்த்தபோது அப்பா மகன் மாதிரியே தெரியவில்லை. நெருக்கமான நண்பர்களை போலவே பழகினார்கள்.பேசினார்கள்.
நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது,
“இப்பலாம் என்கிட்ட யாரும் பிரஸ்மீட் இருக்குன்னு சொல்றதே இல்லை. திடீர்னு காலையில எழுப்பி பிரஸ்மீட்னு சொல்றாங்க. படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்தி கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.
இசை அமைப்பாளர் உழைப்பு மிகப்பெரியது. கிரியாசா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூட படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாக செய்வார். அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப்படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான க்ரிடிட் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த ஆபர் என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேறலெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி” என்றார்
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசியதாவது,
“ஆதித்யவர்மா படத்திற்கான காத்திருப்பு நேரம் ரொம்ப அதிகம். அர்ஜுன் ரெட்டி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அர்ஜுன் ரெட்டி ஸ்கிரிப்ட்டுக்காகத் தான் இந்த படத்திற்குள் வந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது. ஒரு நல்ல ஹீரோ இந்தப்படத்திற்குள் இருக்கிறார். 20+ல பெரிய ஹீரோ நம்மிடம் இல்லை. இப்போது துருவ் கிடைத்து விட்டார். அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பசங்க எல்லாம் படம் பார்த்துட்டு நல்லநல்ல கமெண்ட்ஸ் கொடுக்கிறாங்க. முகேஷ் சார் இப்படத்தை என்சாய் பண்ணி எடுத்திருக்கிறார். ஒரு விநியோகஸ்தரா நானும் என்சாய் பண்ணி விநியோகம் செய்தபடம் இது” என்றார்
நடிகர் விக்ரம் பேசியதாவது,
“இது அருமையான தருணம். ஒரு இதழில் விமர்சனம் எழுதி இருந்தார்கள். “துருவ் சியான் விக்ரமின் மகன் நேற்று. துருவின் அப்பா சியான் விக்ரம் இன்று சபாஷ்” என்று எழுதி இருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஒரு தந்தைக்கு இதைவிட பெருமை இருக்க முடியாது. ஊடகங்கள் மொத்தமும் துருவை கொண்டாடியதற்கு ரொம்ப நன்றி. நான் பேச வேண்டியதை எல்லாம் துருவ் பேசிவிட்டார். இந்தப்படத்தில் ஐந்து முக்கியமான விசயங்கள் இருக்கு. இப்படத்தின் மூலக்கதாசிரியர் சந்திப்பிற்கு முதல் நன்றி. துருவின் டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி.
இந்தப்படத்தை துருவால் நல்லா பண்ண முடியும்னு கான்பிடன்ட் இருந்தது. ரவி.கே சந்திரன் அவர்களுக்கும் நன்றி. அவர் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்கு பெரியபலம் கிடைத்தது. அன்புதாசன் இந்தப்படத்தோட இன்னொரு பலம். அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன்.
அது நல்ல கேரக்டர். அவனும் சிறப்பாக நடித்திருந்தான். துருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாக செய்துவிட்டான். அன்புதாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் வினோத்மாரி எழுதியது.
அவருக்கும் நன்றி. ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார். நான் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன். மேலும் என் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விசயம். இந்தப்படம் கிரியாசா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார்.
இசை அமைப்பாளர் ரதனிடம் நீ பெரிய இசை அமைப்பாளராக வருவே என்று நான் சொன்னேன். அது நடக்கும். இந்தப்படத்தோட சோல் எல்லா உதவி இயக்குநர்களும். ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகை காட்சி ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்