வேண்டாதவர்கள் விருந்துக்கு வந்து விட்டால் சாம்பாரில் உப்பு அதிகரிக்கலாம் ,ரசத்தில் வைகைத் தண்ணீர் கலக்கலாம். பதார்த்தங்கள் பாதிக்கப்பட்டு ஊறுகாயுடன் நின்று விடலாம்.இன்னும் பல எரிச்சல்கள் நடக்கலாம். இதெல்லாம் வேண்டாதவர்களுக்கு !
துணை நடிகர்கள் என்னப்பா பாவம் செய்தார்கள்,?
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்2 படப்பிடிப்பில் பந்தி பரிமாறிய விஷயம் விவகாரமாகி இருக்கிறது. இந்தியன் 2 படத்துக்காக ஆயிரம் வரை துணை நடிகர்கள் பங்கேற்கும் காட்சியை கடந்த சில நாட்களாக சென்னையில் படமாக்கி வருகிறார்கள். இதில் மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர்களும் இணைந்திருக்கிறார்கள். சென்னையை அடுத்த இ.வி.பி.படப்பிடிப்பு அரங்கில் நாளை மறுநாளும் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இவர்களுக்கு உணவு வழங்குவதில்தான் இழிவான போக்கு நடந்திருக்கிறது. அவர்களுக்கு சரியான உணவு கொடுக்கப்படவில்லை. ஆனால் ஏனைய நடிகர்களுக்கு சரியான கவனிப்பு. இவர்கள் சாப்பிட்டது தட்டை கழுவிக் கொண்டு அந்த தட்டில்தான் மதுரையை சேர்ந்த நடிகர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த நாடக நடிகர் ஜெ.பி .ராஜ துரை என்பவர் ஆடியோ வழியாக செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
இவ்விவகாரம் குறித்து நடிகர் ஜே .பி . ராஜதுரை கூறியதாவது, , “இந்தியன் 2 படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி படப்பிடிப்பு அரங்கில் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நடிகர்-நடிகைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான நாடக நடிகர்களும் கலந்து கொண்டோம். அங்கு எங்களுக்கு மட்டும் சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை. மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை கழுவி சாப்பிடும் அவல நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இது என்ன நியாயம்? இதை எல்லாம் யார் கேட்பது?.
இது தயாரிப்பு நிர்வாகத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நடிகர் சங்க நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருந்தபோதே இந்த மாதிரி சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருந்தது. நிர்வாகம் இது மாதிரியான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது சங்கமே இல்லை நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது?.
விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது எங்களுக்கு இந்த மாதிரியான அவலங்கள் எதுவும் நடந்ததில்லை.
அவரே நேரடியாக படப்பிடிப்பு தலங்களுக்கு வந்து சோதனை நடத்துவார்.
சண்டைகோழி2 படத்தின்போது ஒரு தடவை இதுபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது விஷால் நேரடியாக வந்து பார்வையிட்டு அதன் பிறகு எங்களுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது நாங்கள் யாரிடம் முறையிடுவோம்?
நாங்கள் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.நடிகர்சங்க உறுப்பினர்கள் [நாடகநடிகர்கள்]அனைவரும் இணைந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அணிஎன்கிற பெயரில் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்”. என்று கூறினார்.