கஷ்டப்பட்டு கடன் வாங்கி படம் எடுக்கிற நிலைமையில்தான் தமிழ்ச்சினிமா இருந்து வருகிறது.
படம் எடுப்பது சிரமம்.
அதை முடித்து தியேட்டர்களுக்கு கொண்டு செல்வது என்பது கிட்டத்தட்ட தூக்கு மேடைக்கு செல்கிற ஒருவனது மனநிலைமை போன்றது என்று சொன்னால் தப்பில்லை.
அப்படியே தியேட்டர்கள் கிடைத்தால் அது அதிகாலை ஷோவா, இரவுக்காட்சியா என்கிற மிரட்சி .
இப்படி நாட்களை கடத்துகிற தமிழ்ச்சினிமாவில் படத்தின் புரமோஷனுக்கு ஹீரோ ,ஹீரோயின் வரவில்லை என்றால் அந்த தயாரிப்பாளரின் அடி வயிற்றில் அடுப்புதான் எரியும்.
பரமபதம் விளையாட்டு என்கிற ஒரு படம். 24 அவர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பு. இயக்கம் கே.திருஞானம் .ஒளிப்பதிவு ஆர்.டி .ராஜசேகர். இசை அம்ரிஷ் கணேஷ்.
இந்த படத்தில் நந்தா,வேல.ராமமூர்த்தி ,ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் புரமோஷன் விழா அண்மையில் நடந்தது.
பரமபதம் விளையாட்டுக்கு முக்கியமான ஆள் நடிகை திரிஷா. 3 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு வரவில்லை
இந்த விழாவில் பேசிய பிரபல படத்தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா பேசுகையில் நடிகை திரிஷாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
புரமோஷன் நிகழ்ச்சிக்கு திரிஷா இனியும் வரவில்லை என்றால் அவரது சம்பளத்தில் பிடிக்கப்படும் என்பதாக பேசியிருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்தான் சிவா.
இவரிடம் கேட்ட போது “நான் அப்படி பேசியது உண்மைதான். புரமோஷனுக்கு வருவதாக அக்ரிமென்டில் கையெழுத்துப் போட்டு விட்டு வராமல் இருந்தால் என்ன செய்வது?அவரது சம்பளத்தில் ஒரு பகுதி பிடிக்கப்படும் என்று சொன்னேன் ” என்றார் .
“இது எல்லா நடிகர் ,நடிகைக்கும் பொருந்துமா?”
“பொருந்தும் “
“நயன்தாராவுக்கு?”
“ஒப்பந்தம் போடும்போதே புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன் ‘என்று சொல்லிவிட்டுத்தான் கையெழுத்துப் போடுகிறார். அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது ” என்கிறார் சிவா.