ஆதவனின் உதயத்தையும் அவனது இரவுத் தழுவலையும் ஒரே இடத்தில் நின்று அனுபவிப்பதிலும் சுகம் காண்பது பத்திரிகையாளன் தான்.!
வியாழன் காலையில் பிரசாத் லேப் சென்ற திரைப்பட பத்திரிகையாளன் மதியம் ,மாலை,இரவு என பொழுதை கழித்ததில் பேரின்பம் பெற்றிருப்பான்.
கன்னிப்பெண்ணின் முத்தத்தில் மயங்கிய உணர்வு …!
இப்படித்தான் எழுதத் தோணுகிறது.! ஆனால் இல்லம் சென்றதும் இனியவள் முகம் கருகுவது அவனின் இதயத்துக்கு மட்டுமே தெரியும்.!
மாலையில் தொடங்கிய டிம் டிப் படத்தின் இசை வெளியீட்டு விழா அன்றைய நாளின் கடைசி நிகழ்வு.!
கே.ஜி.எப் .பில் மருத்தவமனை நடத்துகிற டாக்டர்.தணிகாசலம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டவர்கள் இயக்குநர் பாக்யராஜ் மற்றும் ‘வென்றே தீருவான் தமிழன்’ஜாகுவார் தங்கம்.
தொடக்கத்தில் பேசிய தயாரிப்பாளர் டாக்டர்.தணிகாசலம் “சூப்பர்ஸ்டார் ரஜினியைப்போல நானும் கன்னட மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறேன். அவரை வெற்றி பெற வைத்தது போல தன்னையும் உயரத்தில் வைத்து ஆதரிக்க வேண்டும் ” என கேட்டுக்கொண்டார்.
“கவலைப்படாதீர்கள் .வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது!”என்று அவரை ஊக்கப்படுத்தினார் ஜாகுவார்.
இந்த விழா மற்ற நிகழ்வுகளை போல இல்லாமல் கதாநாயகன், இசை அமைப்பாளர் ஆகியோரின் பெற்றோர்,தயாரிப்பாளரின் இரண்டு மகள் ஆகியோரை மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்தினார்கள்.
இந்த விழாவுக்கு கவர்ச்சி அம்சமாக வந்திருந்தவர் சஞ்சனா சிங் . இவரால் மட்டும் எப்படி பத்தாண்டுகள் கடந்தும் ‘இளமை’யை வளம் குறையாமல் வளர்க்க முடிந்திருக்கிறது என வியப்படையாமல் இருக்க முடியவில்லை.!
கடைசியாகப் பேசியவர் பாக்யராஜ்.
வழக்கம் போல தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“மவுன கீதம் படப்பிடிப்பில் நான் சரிதாவை ‘வாங்க,போங்க ‘என்றுதான் சொல்லுவேன். அதை சரிதா விரும்பவில்லை. தன்னை சரிதா என்று பெயர் சொல்லி கூப்பிடச்சொன்னார். ஆனால் எனக்கு அது சுலபமாக இருக்கவில்லை. கே.பி.சார் படங்களில் மூத்தவராக பார்த்து பழகிவிட்டதால் என்னைவிட அவர் மூத்தவர் என்கிற உணர்வே இருந்தது.நடிக்கும்போது இயல்பாக இருந்தாலும் பழகும்போது அப்படி இருக்க முடியவில்லை.
இப்படித்தான் இந்த படத்தின் நாயகனுக்கும் சஞ்சனா சிங்குக்கும் இடையேயான ரொமான்ஸ் பாட்டிலும் இடைவெளி இருக்கிறது.சொல்லியிருந்தால் நாயகனின் கூச்சத்தை சஞ்சனா சிங் போக்கியிருப்பார் .சஞ்சனா பேசுகிறவாக்கில் பவர் ஸ்டாரின் மனைவியாக என்பதற்கு பதிலாக பாக்யராஜின் மனைவியாக என சொல்லிவிட்டார்.அது வேற மாதிரியாகி விடக்கூடாதே !
தயாரிப்பாளர் பேசியதில் காமெடியான கவர்ச்சி இருந்தது ..படங்களையும் கவர்ச்சியாகவே எடுங்கள்.அதில்தான் போட்ட பணத்தை எடுக்க முடியும்.”என்பதாக பேசினார்.இந்த கருத்து அவரது அடிமனதில் இருக்கிற ஆதங்கமாகவே தெரிந்தது. சமூக பிரச்னைகளை காமெடியாக சொல்லி மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்தான் பாக்யராஜ்.இன்னொரு வகையில் பார்த்தால் ஆதங்கமாகவும் இருக்கலாம் என தோணுகிறது.