எத்தனையோ கொள்ளைகளில் தமிழ்நாடு மின்வாரியம் அடிக்கிற கொள்ளையும் ஒன்று.
எதிர்த்து கேட்டால் வீட்டில் அடிக்கடி மின் விளக்கு இணைப்பு கிடைக்காது .போன் பண்ணி நேரில் போய் கெஞ்சி கூத்தாடி மின் இணைப்பை மீண்டும் பெற வேண்டும்.
இந்த நிலையில் மின்சாரக்கட்டணத்தை தடாலடியாக உயர்த்தி வசூல் செய்கிறது .
நடிகர் பிரசன்னாவே குமுறி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்
“இந்த லாக்டவுன் நேரத்தில் மின் வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்?” என்றும் ட்வீட் பண்ணியிருக்கிறார். சினிமா நடிகர்களின் டிவீட் என்றால் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தும் .
பால் பாக்கெட் கெட்டுவிட்டது என்று எஸ்.வி.சேகர் டிவீட் போட்ட அடுத்த சில மணிகளில் புதிய பால் பாக்கெட் வழங்கப்படவில்லையா? ஆனால் பிரசன்னா விவகாரத்தில் கண்டனம்தான் வந்தது. இவர் ஆளும்கட்சி இல்லை போல.!
பிரசன்னாவின் குற்றச்சாட்டு தொடர்பாக மின் வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது. இதுதொடர்பாக வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிப்பால் கணக்கீடு செய்ய முடியாத நிலையில் முந்தைய மாத கட்டணமான ரூ.13,528 நிர்ணயம் செய்யப்பட்டது. இதை இதுவரை மின்வாரியத்திற்குச் செலுத்தவில்லை’ என்றும் தெரிவித்திருந்தது.
நடிகர் பிரசன்னா, இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரீடிங் எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள் பொதுவாக கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான், மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் கட்டணம் செலுத்த தவறியது உண்மைதான். அதே அளவு, இதற்குமுன் காலதாமதமின்றி தவறாமல் கட்டணம் செலுத்தி வருகிறேன் என்பதும் உண்மை. அறிந்து கொள்ளவே வாரியம் சொல்வதுபோல் நான்கு மாத கணக்கீட்டாலும் மார்ச் மாத கட்டணம் சேர்த்தும் எனக்குத் தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம். என் தனிப்பட்ட பிரச்னையாக இதை எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர் நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளவே என் ட்வீட்.
மின்வாரியத்தைக் குறை சொல்வதோ குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல. வேண்டுகோள் பொதுவாக எல்லோருக்கும் வந்திருப்பதாகச் சொல்லப்படும் அதிகக் கட்டணம் குறித்த கவன ஈர்ப்பும், அதன் மூலம் வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது முறையில் இப்பிரச்னையில் மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம் செலுத்தத் தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின் மிக்க உதவியாக இருக்கும் என்பதே என் வேண்டுகோள். உள்நோக்கமில்லை .
உள்நோக்கமில்லாத போதும் என் வார்த்தை மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மனம் நோகச் செய்திருப்பின் அதற்காக வருந்துகிறேன். மக்கள் மீது விழுந்திருக்கும் இந்த எதிர்பாரா சுமையை வாரியமும் அரசும் இறக்கி வைக்குமென எதிர்பார்க்கிறேன். பிகு: என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிலுவையும் இன்றி செலுத்திவிட்டேன்”. என்று பிரசன்னா தெரிவித்துள்ளார்.