
ஷகீலா திரைப்படம் பார்த்து சில மாதங்கள் கடந்து விட்டாலும் ஏதோ ஒரு நிகழ்வு நிழலாடியபடியே இருந்தது.
சட்டென நினைவுக்கு வரவில்லை.
இரவு 12 மணியளவில் ஷகீலா ஷகீலா என்றபடி வரிசையாக நினைவுபடுத்திப் பார்த்து வந்தபோது 2009 ஆம் ஆண்டு என்பதை ஊகித்துக்கொண்டேன்.
புரட்டினேன். இது ஒரு மீள்பதிவுதான். ஆனாலும் ஷகீலாவின் பயோபிக்கில் விடப்பட்ட நிகழ்வு அல்லவா! பட்டுப்போனதால் விட்டு விட்டார்களோ என்னவோ?
ஒரு ஆண் ஆயிரத்தெட்டு அவிசாரித் தனம் செய்வான் .அவனை இந்த சமுதாயம் மன்னிக்கிறது. மனிதனாக ஏற்கிறது. ஆனால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு பலி ஆனாலும் அவளை இந்த சமுதாயம் ஏற்பதில்லை. மனுஷியாகவும் மதிப்பதில்லை. விலை மாது என்று பட்டம் கட்டிவிடுகிறது. இதுமட்டுமல்ல அவளை மனமுவந்து ஏற்பவனையும் இழிந்தவனாகப் பார்க்கிறது.
எல்லாமே ஆணாதிக்கத்தின் திமிர்!
ஆணை சார்ந்து வாழ வேண்டிய சமுதாய நடைமுறைகளால் இந்த பெண்ணடிமைத்தனம் கற்காலம் தொட்டே இருக்கிறது.
ஆணின் வலிமை-பெண்ணின் பலவீனம் இவ்விரண்டும் பெண் அடிமைத்தனத்தின் அடித்தளமாக இருக்கிறது.
இவை மாறப்போவதில்லை.
ஆனால் இரக்கப்படலாம் அல்லவா?
சக மனுஷியாக பார்க்கலாம் அல்லவா?
இதில் கொடுமை என்னவென்றால் பெண்களை ,பெண்களே இழிந்தவளாகப் பார்ப்பதுதான்.
முன்னர் ஒரு நிகழ்வு. நினைவுத் திரையில் படமாக விரிந்தது.
நடிகை ஷகீலா ஒரு தொழிலதிபரை காதலிப்பதாகவும் ,அவரை கல்யாணம் செய்யவிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் சொன்னார்.
அவ்வளவுதான் உத்தமர்களுக்கு சுரீர் என்று சுட்டுவிட்டது.
”பிட்டுப் பட நடிகைக்கு காதலா,கல்யாணமா….எந்த கேனையன்யா அவன்”? என சில சினிமாக்காரர்களே கேவலமாக பேசினார்கள். சக நடிகையை பிழை படப்பேசுகிறோம் என்கிற குற்ற உணர்வு கொஞ்சம் கூடஇல்லை .
ஷகீலாவின் திருமணத்தினால் இந்த சமுதாயத்துக்கு என்ன கேடு வந்துவிடும் என அவர்கள் அப்படி கொந்தளித்தார்கள் என்பது தெரியவில்லை.
ஷகீலாவின் திருமணத்தில் எத்தகைய வலி -தியாகம் இருக்கிறது தெரியுமா?
ஒரு சின்ன பிளாஷ் பேக் !
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு படத்தில் நடிப்பதற்கு இந்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷகீலாவின் படம் என்றால் பி .அண்ட். சி . சென்டர்களில் நல்ல வியாபாரம் ஆகும் என்பதால் பைனான்சியர் ஒருவரின் உதவி கிடைத்தது.
ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கவில்லை!
ஷகீலா சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை. இதனால் நொந்து போன தயாரிப்பாளர் படப்பிடிப்பை தள்ளிப் போட்டுவிட்டார்.
பைனான்சியருக்கு பயங்கர டென்சன். பணம் போட்ட மனுசனாயிற்றே!சும்மா இருக்க முடியுமா?
நேராக நடிகையின் வீட்டுக்குப் போய்விட்டார் .
காரசாரமாக திட்டவேண்டும் என்கிற கோபத்துடன் போனவர் அங்கிருந்த நிலைமையைப் பார்த்ததும் ,அவரால் எதுவும் பேசமுடியவில்லை.
ஷகீலாவின் அம்மா படுத்தபடுக்கையில்.! ஒரு நாளைக்கு இரண்டு முறை டயாலிஸ் பண்ணவேண்டும் . கிட்னி பெயிலியர். கண்ணீர் மல்க ஷகீலா.
ஆத்திரமுடன் சென்ற பைனான்சியர் அனுதாபத்தை சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். அது மட்டுமல்ல, ஷகீலாவின் அம்மாவுக்கான மருத்துவ செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார். மனிதாபிமானம்.
வட்டிக்கு வட்டி போட்டு வசூல் செய்பவர்கள்தான் பைனான்சியர்கள் என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் இந்த மனிதர் வித்தியாசமாக இருக்கவே நடிகைக்கு அவரைப் பிடித்துப்போனது. அவருக்கும் நடிகையை பிடித்து விட்டது.
இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டனர்.
ஆனால் பைனான்சியரின் உறவுகளும் , நட்பு வட்டமும் அவரை எந்த அளவுக்கு மதிக்கும் என்கிற பிரச்னையால் அவர்களால் பகிரங்கமாக அறிவிக்க முடியவில்லை.
சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப் படுகிறவர்கள் சிலர் எவ்வளவு கேவலமாக திரை மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? அவர்களைவிட இந்த பைனான்சியர் மிக ,மிக உயர்ந்தவர்.
நட்டுக் கழன்று நடப்பதற்கே துணை தேவைப் பட்ட 86 வயது காந்தியவாதி (?) முன்னாள் கவர்னர் என். டி. திவாரியை விட உயர்ந்தவர். திவாரிக்கு தினமும் மூன்று பெண்கள் படுக்கைக்கு வேண்டுமாம். வீடியோ ஆதாரங்களுடன் நாறிக் கொண்டிருந்ததையும் இந்த நாடு பார்த்திருக்கிறது.
ஷகீலாவை இழிவுபடுத்துகிறவர்கள் யோசிப்பார்களா?
ஆண் ஆதிக்கவாதிகள் சிந்திக்க நல்ல வாய்ப்பு!












