‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்தது. இந்நிலையில் இயக்குநர் பாலா சென்னையில்இன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த விஷயத்தில் நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். கூட்டாஞ்சோறு என்று வேல ராமமூர்த்தி எழுதிய கதை, அடுத்த பதிப்பில் குற்றப்பரம்பரை என்று வெளியானது. அந்தக் கதையின் ஒரு விஷயத்தை நான் திரைக்கதையாக்கி படமாக எடுக்கப் போகிறேன். ஆனால், பாரதிராஜா, ரத்னகுமார் கூட்டணி எடுப்பது நடந்த வரலாறு.
நீங்கள் வரலாற்றை எடுக்கிறீர்கள். நான் கதையை படமாக எடுக்கிறேன். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை யார் வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம். அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். நான் செய்வது வேறு. கதையைப் படமாக்குவது. வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து பாரதிராஜா, ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க பூஜை போட்டிருக்கிறார். ஆனால் நான் வேலராமமூர்த்தி எழுதிய ‘கூட்டாஞ்சோறு’ நாவலில் இருக்கும் சில சம்பவங்களை எடுத்துக்கொண்டு மேலும் சில காட்சிகளைச் சேர்த்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறேன். நான் எடுக்க இருப்பது கதை. பாரதிராஜா எடுக்க இருப்பது வரலாறு. இரண்டுக்கும் சம்மந்தமில்லை. நான் எடுக்கும் படத்துக்கு வேறு தலைப்பை வைக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் 4 மாதங்கள் ஆகும்.
ஏற்கனவே இதுசம்பந்தமாக பாரதிராஜா என்னிடம் பேசியபோதே ‘நான் குற்றப்பரம்பரை வரலாற்றை படமாக எடுக்கவில்லை’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகும் பாரதிராஜா ‘என் எச்சிலை பாலா தின்னமாட்டான் என்று நினைக்கிறேன்’ என்று பேட்டி கொடுத்தார். போனவாரம் தனஞ்செயன் என்னை அழைத்து, ‘குற்றப்பரம்பரை படத்திற்கு பாரதிராஜா பூஜை போடுகிறார்’ என்று சொன்னபோதுகூட, ‘என்னை அழைத்தால் நானும் பூஜைக்கு நிச்சயம் வருவேன்’ என்றுதான் தனஞ்செயனிடம் சொன்னேன்.
அதை தனஞ்செயனும் பாரதிராஜாவிடன் சொல்லியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா ‘அப்படியா சொன்னான்? எனக்கு ஷாக்கா இருக்கே. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. கூப்டலாமா வேணாமா’ன்னு யோசிக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார்.அதற்குப் பிறகு பாரதிராஜா, தனஞ்செயனிடம் ‘பாலா அங்க வந்தா யாராவது ஏதாவது பேசி, சீன் க்ரியேட் ஆகிடும். அதுனால கூப்பிடவேண்டாம்’ என்றிருக்கிறார். ஆனால் ரத்னகுமாரோ, ‘பாலா ஷூட்டிங்குக்கு வரட்டும். வந்து ஷூ தொடைக்கட்டும்’ என்றும், ‘பாலா ஒரு கதைத் திருடன், பாலாவுக்கு ‘கூறு’ கிடையாது’ என்றெல்லாமும் பேசுகிறார். இதற்கு மேலும் நான் அமைதியாக இருந்தால், மழுமட்டையாக ஆகிவிடுவேன் என்பதால்தான் இந்த சந்திப்பு!
இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவும், எழுத்தாளர் ரத்னகுமாரும் என்னைப்பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்கள். இந்தப் படம் குறித்த என் விளக்கத்தைச் சொல்ல இன்று இயக்குநர் பாரதிராஜாவை 3 முறை தொடர்புகொண்டேன். இரண்டு முறை அவர் போனை எடுக்கவில்லை. மூன்றாவது முறை போனை எடுத்த அவர் “3-வது தடவையும் அவன்தான்” என்று யாரிடமோ சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
வரலாற்று நிகழ்வை ஒருவர் மட்டும்தான் படமாக்கலாம் என்று எந்த விதியும் இல்லை. யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். பாரதிராஜாவும், ரத்னகுமாரும் என்னைப்பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 4 முறை என்னைப் பற்றி அவர்கள் பேசும்போது பொறுமையாக இருந்துவிட்டேன். இனிமேல் பொறுமையாக இருக்க முடியாது. இதற்கு மேலும் என்னைப் பற்றி பேசுவது அவர்களுக்கு நல்லதல்ல.
இவ்வாறு இயக்குநர் பாலா கூறினார்.