ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிவந்த ‘ஜெய்பீம்’ரசிகர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வட மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக ‘ரெட் சேன்டில்’ வெளிவரவுள்ளது. இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார்.
வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், ‘கர்ணன்’ ஜானகி உட்பட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் மூலம் ‘கழுகு’ சத்ய சிவாவின் உதவியாளர் குரு ராமானுஜம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் குருராமானுஜம் கூறியதாவது,”இது ஆக்சன் கலந்த த்ரில்லர் ஜானர். 2015 ல் நடந்த உண்மைச் சம்வத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை போலி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்கள். உண்மையில் இதுப் போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இதன் கதை ரேணிக்குண்டாவில் நடக்கிறது.
செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை பற்றி சொல்லும் இந்தப் படம் கமர்ஷீயல் அம்சங்களோடு உருவாகியுள்ளது.வனப் பகுதியில் நடக்கும் கதை என்பதால் காட்டில் உள்ள சிறிய உயிரினங்கள் முதல் பெரிய விலங்குகள் வரை அனைத்து மிருகங்களின் ஓசையையும் நுட்பமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்.‘ஆஸ்கார்’ நாயகன் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் பணிகளை மேற்கொள்கிறார். சாம்.சி.எஸ்,இசையமைத்து வருகிறார்.
ஜே.என்.சினிமா நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார் பார்த்தசாரதி.என்கிறார்.இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணி நிறைவு பெற்று, விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.