
ரொம்ப நாளாச்சு …இல்ல,இல்ல ரொம்ப காலமாச்சு நம்ம அமீரை பார்த்து.! அப்பப்ப யாரையாவது வைவாரு ..அறிக்கை வாசிப்பாரு. கொஞ்சம் கோபக்காரர் ,ஆனாலும் இன மான உள்ள தமிழர்.
இப்பத்தான் புதிய படத்தின் இயக்குநர் பொறுப்பு ஏற்றிருக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்தான் “இறைவன் மிகப்பெரியவன்”.
ஜெ எஸ் எம் பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .இயக்குநர் கரு.பழநியப்பன் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது.
இவ்விழாவினில் இயக்குநர் அமீர் பேசியதாவது…
“இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் அறிமுக விழா.
ஒரு புதிய தயாரிப்பாளர், இந்த காலத்தில் படம் செய்வதே கடினம் அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். அவருக்காக தான், அவரை அறிமுகப்படுத்தும் நோக்கம் தான் இந்தவிழா.
நானும் வெற்றி மாறனும் சேர்ந்து தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். நான் வேறு படங்கள் செய்யும் நிலையிலிருந்த போது, இந்தப்படத்தை இந்தகதையை செய்யலாம் என தோன்றியது .நான் வெற்றியிடம் இறைவன் மிகப்பெரியவன் செய்யலாமா என கேட்டேன், கண்டிப்பாக செய்யலாம் என்றார். இடையில் நான் இன்னொரு படமும் செய்திருக்கிறேன். அதைப்பற்றி அறிவிப்பு விரைவில் வரும் .இப்படத்தை பொறுத்தவரை கரு பழனியப்பன் நடிக்கிறார். இப்போதைக்கு இது மட்டும் தான் முடிவாகியுள்ளது
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள், இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விசயமாக இருக்கிறது.
இன்னும் அடுத்தடுத்து நிறைய படங்கள் செய்யவுள்ளேன். சினிமாவில் என்னை முழுதாக பார்க்கலாம். ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாக சொல்லும் , நன்றி.”என்றார் .
உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார் அமீர்.!
இயக்குநர் கரு பழனியப்பன் பேசியதாவது…
” இந்தப்படத்தை எடுப்பதாக சொன்னபோது அமீர் தான் இதற்கு பொருத்தமானவர் என தோன்றியது. நான் ஒரு பக்கம் ஆண்டவர் என படமெடுக்கிறேன், நீங்கள் இறைவன் மிகப்பெரியவன் என எடுக்கிறீர்கள், இரண்டுக்கும் யுவன் சங்கர் ராஜா இசை என்றால் எல்லோரும் நம்மை தான் பேசுவார்கள் என்றேன். இருக்கட்டும் என்றார்.
இறைவன் பொதுவானவனா என தெரியாது ஆனால் மனிதன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை ஒரு கலைஞன் சொல்ல வேண்டிய காலம் இது, அதை இந்தப்படம் செய்யும். இந்த டைட்டிலேயே ஏன் இறைவன் மிகப்பெரியவன்’ என்று சொல்கிறீர்கள் என பிரச்சனை செய்வார்கள்.
இந்தக்காலத்தில் எதையுமே தவறாக புரிந்து கொள்ளும் பழக்கம் தான் அதிகம் இருக்கிறது. வெற்றிமாறனை விட இப்படத்தை அமீர் செய்வது தான் சரி. எங்களை போல் மியூசிக் தெரியாவர்கள் படத்தில் யுவன் அழகான இசை தர காரணம் நம்பிக்கையும் புரிதலும் தான். படமெடுக்க முடிவெடுத்து விட்டால் இயக்குநரை நம்ப வேண்டும். அமீரை நம்புங்கள் படம் கண்டிப்பாக நன்றாக வரும். எந்த ஒரு வேலையை செய்தாலும் நேர்மையாக ஒழுங்காக தனித்தன்மையுடன் வேலை செய்ய வேண்டுமென நினைப்பவர் அமீர். இந்த விழா போலவே அமீர் உற்சாகமுடன் இயக்கும், இறைவன் மிகப்பெரியவன் படம் வெற்றி பெறும். ரசிகர்களுக்கும் உற்சாகம் தரும் நன்றி.”என்றார் .
தயாரிப்பாளர் ஜாஃபர் ,திரைக்கதை ஆசிரியர் தங்கம் ,ஒளிப்பதிவாளர் ராம்ஜீ,மற்றும் பலர் பேசினார்கள்.












