திரைப்பட நிகழ்ச்சிகள் சில ஆக்சா பிளேடு மாதிரி ஆளை போட்டுப்பார்க்கும்.
சில நிகழ்ச்சிகள் பருவக்குமரியிடம் பேசுவதைப்போல சிலிர்ப்புடன் இருக்கும்.
விருமன் திரைப்பட நிகழ்ச்சியில் அத்தகைய அனுபவம் நேர்ந்தது.
குறிப்பாக ஆர்.கே.சுரேஷ் ,சூரி , மனோஜ் பாரதிராஜா ,இந்திரஜா ,அதிதி விஜய் டி .வி.மைனா நந்தினி ஆகியோரை ஆக்சா பிளேடுக்கு ஒப்பிடலாம். அறுத்துத் தள்ளிவிட்டார்கள். 2டி நிறுவனத்தின் விருந்தோம்பலை பற்றியே சொன்னார்கள். சாப்பாட்டில் குறியுடன்இருந்து அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விருமன்”.
முத்தையா இயக்கிய இந்த படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள விருமன் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது. பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனை எந்த அளவுக்கு நேசிக்கிறார்களோ அந்த அளவுக்கு விருமனையும் காதலிக்கிறார்கள் என்பது மதுரையிலேயே தெரிந்து விட்டது.
அரசியல் ,சினிமா இரண்டின் வெற்றியையும் தீர்மானிக்கிற சக்தியாக மாமதுரை இருக்கிறது.
நடிகர் ஜி.எம்.சுந்தர் , சிங்கம்புலி, , மனோஜ்பாரதிராஜா ,,நடிகை இந்திரஜா, ஆடைவடிவமைப்பாளர் வினோதினி ,நடன இயக்குனர்கள் ஷோபி,சாண்டி ,கலை இயக்குனர் ஜாக்கி ,பாடலாசிரியர் சினேகன் , ராஜூமுருகன்,பாடலாசிரியர் மணிமாறன் ,நடிகை சரண்யாபொன்வண்ணன் ,ஆர்.கே. சுரேஷ் ,சூரி , ராஜ் கிரண்,அதிதி ,ஆகியோரும் பேசினார்கள்.
சக்தி பிலிம் பாக்டரி சக்தி பேசும்போது,
“தமிழ்நாடு விநியோகம் சக்தி பிலிம் பாக்டரி செய்கிறது. ஃபான் பாயாக தான் நான் விநியோகம் செய்திருக்கிறேன். ஏற்கனவே நான் பணியாற்றிய நிறுவனம், இப்போது சொந்த நிறுவனம் எதுவாக இருந்தாலும் மண் சார்ந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும்.
அதிலும் கார்த்தி சார் படத்தை கொண்டாடுவார்கள். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், கடைக்குட்டி சிங்கம், நான்காவதாக விருமனையும் நான் தான் விநியோகம் செய்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
ராஜ்கிரண் போன்ற கலைஞர்களின் படங்களை வண்டிக் கட்டிக் கொண்டு வந்து பார்ப்பார்கள். சம காலத்தில் கிராமங்களை இயல்பாக பதிவு செய்ய பாரதிராஜாவிற்குப் பிறகு யாரும் கிடையாது. அதை முத்தையா நிறைவேற்றி இருக்கிறார். மண் சார்ந்த அயல்நாட்டு படங்கள் முதல், நம் நாட்டு படங்கள் வரை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று சலிப்படைய செய்யும். நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்கள் தான் அருமையாக காதலிப்பார்கள். அதை நிறம் மாறாமல் பதிவு செய்தது முத்தையா தான்.
உலகத்தில் எங்கோ மூலையில் இருக்கும் விஷயங்களைப் பற்றி தேடித் தேடி தெரிந்து கொள்கிறார்கள். ஆனால், பக்கத்தில் இருக்கும் கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள தவறி விடுகிறோம். கூட்டு குடும்பங்கள் எப்படி இருக்கும் என்பதை மதுரை மாதிரியான கிராமங்களில் தான் தெரிந்து கொள்ள முடியும். கிராம படங்களை ஆதரித்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் மேன்மையடையும். அதற்கான மிகப் பெரிய அடித்தளமாக இப்படம் இருக்கப் போகிறது. என் பெயருக்கு பின்னால் எனது அப்பா பெயர் இனிஷியலாக இருப்பது போல எனது வியாபாரத்திற்கு 2டி நிறுவனம் இருக்கும். அவர்களின் குடும்பத்திற்கு நன்றி என்ற வெறும் வார்த்தையால் கூற முடியாது. அனைத்து இப்படம் வெற்றியைக் கொடுக்க வேண்டும்” என்றார்.
2டி ராஜசேகர் பாண்டியன் பேசும்போது,
கார்த்திக்கு தான் முதலில் நன்றி கூற வேண்டும். கொம்பன் போன்று ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். கொம்பன் – 2 எடுக்கலாம் என்று முத்தையா கூறினார். ஆனால், புதிதாக மண் சார்ந்த படம் வேண்டும் என்றதும், விருமன் கதையைத் தேர்ந்தெடுத்தோம். உறவுகளை அரவணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதியை மறந்துவிடாத படி ஒரு படம் எடுக்க நினைத்தோம். எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொள்ளும்படியான ஒருவர் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். இப்போது எனது தங்கை அப்படி இருக்கிறார்.
அதிதியை அறிமுகப்படுத்தியதில் எங்களுக்குத்தான் பெருமை. எங்களை நம்பி அதிதியை அனுப்பி வைத்த ஷங்கர் சாருக்கு நன்றி.
மதுரையில் பிரமாண்டமாக இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. நம் வீட்டில் திருமணம் நடக்கும்போது பெரியப்பா, சித்தப்பா யாரையாவது ஒருவரை மறந்துவிடுவது போலத்தான் பாடலாசிரியர் சினேகனை மறந்துவிட்டோம். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எல்லோருக்கும் இப்படத்தை பிடிக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.
இயக்குனர் முத்தையா பேசும்போது,
“இப்படம் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான். என் வீட்டிற்கு பக்கத்தில் நேரில் நடந்ததைதான் இப்படத்தில் எடுத்திருக்கிறேன். கார்த்தி சாரிடம் இக்கதையைக் கூறியதும் ஒப்புக் கொண்டார். இப்படம் துவங்கும்போது என்ன வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளுங்கள் என்று ராஜா அண்ணன் கூறினார். ஆனால், இப்படத்தில் அதிகமாக ஆன செலவு வெள்ளையடித்ததுதான்.
நிறைபாண்டி, முனியாண்டி இந்த இரு கதாபாத்திரம் தான் முக்கியமானதாக இருக்கும். நந்தினி, அருந்ததி நடித்திருக்கிறார்கள். வெற்றியின் ஜனகன மண படமும் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இளையராஜா சார் என் படத்திற்கு டைட்டிலில் பாடிகொடுத்ததில் மிகுந்த பெருமை. இக்கால இயக்குனருக்கு அமைவது அரிது. அனைத்து ஓட்டுனர்களும் இரவில் அமைதியாக வண்டி இயக்க அவர் தான் காரணமாக இருக்கிறார்.
செல்வா நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வடசென்னையில் தத்ரூபமாக படப்பிடிப்பு தளத்தை அமைத்திருந்தார் ஜாக்கி. ஆகையால், இந்த படத்திற்கு அழைத்தோம்.
பொதுவாக நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது வியாபார நோக்கத்தையும் மனதில் வைத்துத்தான் எடுப்பேன். சூழல்கள் அமைந்தால் நகரம் சார்ந்தும் படம் எடுப்பேன். ஆனால், தவறான படத்தை ஒருபோதும் இயக்க மாட்டேன். என் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் வசனமோ இடம்பெறாது.”என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது,
“இப்படத்தின் டிரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல்நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து கலாச்சாரம் மாறி விட்டதா? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? ஏனென்றால், கிராமத்தில் கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், டிரைலர் வெளியாகி வெற்றிப் பெற்றதும் அந்த எண்ணம் மாறிவிட்டது.
பருத்தி வீரன் பாணி கொம்பனில் வரக் கூடாது என்று கவனமாக இருந்தேன் . கடைக்குட்டி சிங்கத்தில் 5 அக்காவிற்கு தம்பியாக இருக்க வேண்டும். முன் படத்தின் சாயல் வரக் கூடாது என்று எண்ணுவேன் . கிராம வாழ்க்கை தான் அழகாக இருக்கிறது. அந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும்போது சுகமாக இருக்கிறது.
என் மாமனாருக்கு என்னுடம் பேச மிகவும் பிடிக்கும் ஆனால், எனது தோளை தொட்டுவிட்டு சென்று விடுவார். நானே வலிய சென்று பேசி அவரிடம் பேசுவேன். உலக அரசியல் வரைக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். எப்படி என்று கேட்டால், எல்லாம் டீ கடையில் தான் என்பார்.
ராஜ்கிரண் சார் படத்தில் இருக்கிறார் என்று கூறியதும் நம்பிக்கை வந்துவிட்டது.
காசு வாங்காமல் நடிப்பேன் ஆனால், சம்பளம் வாங்காமல் நடிக்க மாட்டேன், என்பார் பிரகாஷ் ராஜ் சார். கலைஞன் என்றால் பணத்தைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற அழகான விஷயத்தை பிரகாஷ் ராஜ் கற்றுக் கொடுத்தார்.
ஏற்கனவே, இருக்கும் கிராமம் போன்ற காட்சிகள் இல்லாமல் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று ஜாக்கியிடம் கேட்டுக் கொண்டோம். செல்வாவிடம் எனக்கு க்ளோசப் வேண்டாம், அழகான கிராமங்கள் இருக்கும்போது ‘வைட்’ கோணத்தில் வைத்தே எடுங்கள் என்று கூறினேன். அந்த கிராமத்தில் வாழ்வோர் அப்போதுதான் அதன் அழகைக் கண்டு ரசிப்பார்கள் என்று கூறினேன்.
என் முதல் படம் வெற்றி என்ற வார்த்தையை என்னிடம் முதலில் கூறியது சக்தி தான். நகரத்தில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு, கிராமப்புறங்களில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு என்று உற்சாகமாக கூறுவார். அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மாதிரி. மிகவும் உண்மையான மனிதர்.
2டி நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று தான் மதுரையில் வைத்தார்கள். ஆனால், அங்கிருந்த ரசிர்களின் விசில் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 5 மணி நேரம் உற்சாகமாக இருந்தார்கள்.
அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, நம்பிக்கை என்று கூறும் படம் தான் இது.
எங்களுக்கு எதாவது ஒன்று என்றால் பிருந்தா பக்கத்திலேயே இருப்பார். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவருடைய தம்பி உடன் இருந்தார். அதன் காரணமாகத்தான் கந்தன் வேண்டும் என்று முடிவெடுத்தோம். அண்ணனையும், பிருந்தாவையும் கொடுத்த அப்பா அம்மாவிற்கு நன்றி.
அனல்அரசு மாஸ்டர் சண்டைக் காட்சிகளை இயக்கியிருக்கிறார்.
படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு அம்மா ஓடிவந்து இங்கிருக்கும் பள்ளியை வந்து பாருங்கள் என்று கூறினார். அங்கு சென்று பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இப்போது அகரம் சார்பாகவும், பலரும் செய்த உதவியால் இன்று சிறப்பாக இருக்கிறது. இதுபோன்று இருக்கும் இடங்களில் கேட்டபிறகு உதவி செய்யாமல் தாமே முன்வந்து செய்ய வேண்டும்.இப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.