மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் ஜிஎன்ஆர்.குமரவேலன் இயக்கத்தில்,அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “சினம்”. அருண் விஜய் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிற படம்.
இப்படத்தில், காளி வெங்கட்,ஆர்.என்.ஆர்.மனோகர்,கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஷபீர் இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மைக்கேல், கலை இயக்கத்தையும் படதொகுப்பை ஏ.இராஜாமுகமதுவும் செய்துள்ளனர்.
ஆர்.சரவணன், இப்படத்தின் கதை மற்றும் உரையாடல்களை எழுதியுள்ளார். மதன் கார்க்கி–பிரியன்-தமிழணங்கு ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழாவில் திரைப் பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினில் இயக்குநர் ஹரி பேசியதாவது..,
“படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைக்கரு ஆழமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக இருக்கும் எனத் தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும்,இந்தப் படம் அனைவருக்கும் இலாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் அறிவழகன் பேசியதாவது..,
” இயக்குநர் குமரவேலன் திறமையான நபர், அவருடைய முந்தைய படங்கள் அவருடைய ஆழமான கதையமைப்பை வெளிக்காட்டியது. ஒளிப்பதிவாளர் கோபிநாத் உடைய விஷுவலை பார்க்க நான் காத்திருக்கிறேன். இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் சாந்தனு பேசியதாவது..,
தன்னுடைய திறமையையும், அதையும் தாண்டி கடின உழைப்பையும் கொடுத்து தனக்கென தனிப்பாதையை அருண் விஜய் உருவாக்கியுள்ளார். அது திரைத்துறையில் எளிதானதல்ல. விஜயகுமார் சார் தன்னுடைய மகனுக்காக பெரிய அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளார். அவருக்குத் தொடர்ந்து வெற்றிகள் குவிய வேண்டும்.” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,
அருண் விஜய்யின் , பாடும் திறமையைப் பாராட்ட வேண்டும். இவ்வளவு நன்றாகப் பாடுவார் என எனக்குத் தெரியாது. இயக்குநர் குமரவேலன் திறமையான இயக்குநர், அவருடன் மூன்று படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட, அவர் இந்தப் படத்தில் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளார்.இந்தப் படம் செப்டம்பர் 16 வெளியாகவுள்ளது, அனைவரும் படம் பாருங்கள் நன்றி “என்றார்.
மகிழ் திருமேனி பேசியதாவது..,
” விஜயகுமார் சார் மிகவும் திறமை வாய்ந்த அதே நேரத்தில், மனிதநேயம் மிக்க ஒரு நபர். இயக்குநர் குமரவேலனுடைய அனைத்துப் படங்களையும் இரசிகர் போல் பார்ப்பவன் நான். இந்தப் படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் பிரசன்னா பேசியதாவது..,
“பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் எனது குடும்ப நண்பர். இயக்குநர் குமார் உடைய திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் பார்த்திபன் பேசியதாவது..,
“அருண் விஜய் வெற்றியைச் சந்திக்க பல காலம் ஆகியது, அவர் தனது தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருத்தர். இசையமைப்பாளர் சபீர் உடைய பாடல் மயக்கும் அளவில் இருக்கிறது. தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் ,இசையமைப்பாளர் சபீர் ,நடிகை பாலக் லால்வானி ,தயாரிப்பாளர் விஜயகுமார் ஆகியோரும் பேசினார்கள்.
படத்தின் இயக்குநர் ஜிஎன்ஆர்.குமரவேலன் பேசும்போது ,
“இந்தப் படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தைக் கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்கக் கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்தப் படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்தப் படம் கண்டிப்பாக பேசப்படக் கூடிய படமாக இருக்கும் “என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசியதாவது..,
“இந்தப் படம் தியேட்டரில் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களைத் தொடர்புபடுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரமாக இந்தப் படத்தின் பாரிவெங்கட் கதாபாத்திரம் இருக்கும். எனது முந்தைய படத்திற்கும் இந்தப் படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்தப் படத்தில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் இருக்கின்றன. அதை உருவாக்கிய இயக்குநர் குமரவேலன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தைத் தயாரித்த என் தந்தைக்கு நன்றி. என்னை நம்பி அவர் ஓகே சொன்னார். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் “என்றார்.