திரையை இரண்டு பாதியாகப் பிரித்து ஒரேநேரத்தில் இரண்டு பக்கமும் இரண்டு காட்சிகளைத் திரையிட்டு அதில் கதை சொல்லியிருக்கும் புதிய உத்தியில் தயாராகியிருக்கும் படம் பிகினிங்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள்.
சனவரி 26 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சனவரி 3 ஆம் தேதி நடந்தது.
இந்நிகழ்வில் படத்தை வெளியிடும் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது……
இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றைப் பயன்படுத்தினோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுபவம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்தப் படத்திலும் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிகச் சவாலாக இந்தஒ படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. மிகவும் திறமையான இயக்குநர், நுணுக்கமான அழகான இயக்குநர் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. இப்படம் எடுப்பதற்கு ஜெகன் அம்மா தான் நிலத்தை விற்றுப் பணம் கொடுத்தார் என்று தெரிந்ததும், இப்படத்தின் ஆதாரமான அடித்தளம் அங்கேயே தொடங்கிவிட்டது. உனது அம்மாவும், எனது அம்மாவும் வேறு வேறு அல்ல. ஒரு சரியான நபருக்குத் துணையாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகையால், அவ்வளவு சாதாரணமாக இந்தத் துறையை விட்டுச் செல்ல மாட்டீர்கள், இந்தத் துறையும் உங்களை விடாது.
இப்படத்தைப் பிருந்தா சாரதியும், எடிட்டர் லெனினும் பார்த்து விட்டு, இது விருது படமோ, ஓடிடி படமோ கிடையாது, திரையரங்கிற்கான படம் என்றார்கள். அதை படத்தைத் திரையிடும்போது உணர்ந்தேன். அதேபோல், இப்படம் வெளியானதும் இருக்கும் என்று நம்புகிறேன். பிகினிங் படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் மற்றும் மாஸ்டர்பீஸ்-ம் பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இவர்களைப் போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான். என் பின்னாடி 40 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே எண்ணத்தில் சேர்ந்த கூட்டு முயற்சி தான் வெற்றியாகும். இதுவரை வெற்றிபெற்ற பெரிய கலைஞர்களுக்கும் அது நிகழ்ந்துள்ளது.
இப்படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக நடித்திருக்கிறீர்கள் எனப் பாராட்டினால் எல்லோரும் இயக்குநர் தான் காரணம் என்று கூறுவார்கள். இயக்குநர் அனைவரிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். எதிர்காலத்திலும் என்னுடைய நிறுவனப் படங்களிலும் உங்களைப் பயன்படுத்துவேன். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த ஜான்சன் சாருக்கு நன்றி.
இதுவரை எனது அனைத்துப் படங்களுக்கும் ஆதரவளித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் அதேபோல் ஆதரவு தாருங்கள்.
என் இயக்கத்தில் இரண்டு, மூன்று மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். உத்தமவில்லன் படத்தைத் திறமையாக, கடின உழைப்போடு தான் எடுத்தார்கள். ஆனால், அப்படம் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்தது உண்மை தான். முதலில் நாங்கள் முடிவெடுத்தது பாபநாசம் தான். ஆனால், கமல் சார் ஆசைப்பட்டதால் உத்தம வில்லன் படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் சார் ஒரு படம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் என்றார்.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பிருந்தா சாரதி பேசும்போது…..
நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்பதி பிரதர்ஸ் வழங்கும் என்பதைத் திரையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தரமான படத்தை வெளியிடும் நிறுவனமாக லிங்குசாமி தொடங்கியபோது, மலையேறுகிறவன் மனநிலை போல் நாம் ஏறிக்கொண்டே இருந்தால் வெற்றியடைவது நிச்சயம். ஆனந்தம் படத்தின் போது இருந்தே அவர் உடன் இருக்கிறேன். நிறைய கவிதை அனுப்பி எப்படி இருக்கிறது? என்று கேட்பார். சென்னையில் ஒரே அறையில் தங்கினோம். உதவி இயக்குநராக ஏ.வெங்கடேஷிடம் சேரும்போது நான் உடன் இருந்தேன். பல படங்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுக்குமாறு அழைப்பார். அதேபோல் தான் இந்தப் படத்தையும் பார்க்க அழைத்தார்.
தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்கும் மறுபுறம் வீடியோ ஓடிக் கொண்டிருக்கும். கீழே ஸ்கோரிலிங் ஓடிக் கொண்டிருக்கும். அனைத்தையும் பார்த்து பழக்கப்பட்ட நாம், இந்தப் படத்தையும் பார்க்க முடியும்.
விருது வாங்கும் படம் என்ற அடிப்படையில் தான் இப்படத்தைப் பார்க்கச் சென்றேன். ஆனால், முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படம். நகைச்சுவையோடு சிறப்பாக இருக்கிறது. கௌரி திரிஷாவை போல் வளருவார் என்றார்.
நடிகர் விஜய் ஆதிராஜ் பேசும்போது……
இந்தப் படத்தின் மீது அபரிமிதமான காதல் இருக்கிறது. வலது மூளை, இடது மூளை திரைப்படம் என்று கூறலாம். வினோத்தை சினிமாத் துறை வலைவீசி தேடும் அளவிற்கு நடித்திருக்கிறார். கௌரி காந்தம் போல் நடித்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து தமிழ்த் திரையுலகிற்குச் சிறந்த இயக்குநர் கிடைத்திருக்கிறார். இப்படத்தில் கைதட்டும் இடங்கள் நிறைய இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம் குமார் பேசும்போது…..
இயக்குநர் கதை கூறும்போதே நடித்துக் காட்டுவார். எனக்கும் இயக்குநருக்கும் வாக்குவாதமாகத் தான் சென்றது. அந்த வாக்குவாதம் காதலர்களுக்கு இடையில் நடப்பது போலத் தான் இருந்தது. இரண்டு திரையிலும் இரண்டு கண்களால் பார்க்கும் திறமை கொண்டவர் என்றார்.
நடிகர் மகேந்திரன் பேசும்போது…..,
இப்படத்தின் கதையை இயக்குநர் கூறும்போது, அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நடிக்கிறேன் என்று கூறினேன். இந்த படத்திற்கு பிறகு தவிர்க்க முடியாத நடிகராக வினோத் இருப்பார். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் என்றார்.
நடிகர் சச்சின் பேசும்போது….
நல்ல படம் எடுத்து வைத்திருக்கிறோம். அது வீணாகிப் போய் விடுமோ என்ற பயம் இருந்தது. திருப்பதி பிரதர்ஸ் படத்தை வெளியிடுகிறார்கள் என்று கூறியதும் நம்பிக்கை வந்தது என்றார்.
ஒளிப்பதிவாளர் வீர குமார் பேசும்போது….
தொடக்கத்தில் இருந்து இறுதிக் காட்சி வரை என்கேஜ்டா இருக்கும். இதுவரை நான் பணியாற்றாத திரை. பிளவு திரையில் என்னை விட இயக்குநர் தெளிவாக இருந்தார் என்றார்.
நடிகை கௌரி கிஷன் பேசும்போது…..
இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இயக்குநரின் குணம் இருக்கும். இந்தப் படத்திற்குப் பிறகு குழந்தை நட்சத்திரமாக இருந்த என்னை கதாநாயகியாகப் பார்ப்பார்கள்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட எல்லோரும் நன்றாகவே இரசித்தார்கள். சாதனைக்காகவும், விருதுகளுக்காகவும் இந்தப் படத்தை எடுக்கவில்லை.
ஒவ்வொரு காட்சியிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறோம். சினிமாவில் புது மார்க்கெட் உருவாக்கியிருக்கிறோம் என்றார்.
நடிகர் வினோத் கிஷன் பேசும்போது…..
இந்தப் படத்தில் வரும் பாலசுப்பிரமணியன் பாத்திரம் மூளை வளர்ச்சி இல்லாத பாத்திரம் மட்டும் இல்லை. நல்ல ஆன்மா. இயக்குநரின் அணுகுமுறை எப்போதும் நேர்மையாகத் தான் இருக்கும். பல நிறுவனங்களுக்கும் ஏறி இறங்கியிருக்கிறார்.
திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறோம் என்று கூறிய போது தான் இப்படத்தின் முக்கியத்துவம் புரிந்தது.
இயக்குநர் 100% தெளிவாக கதை, காட்சிகள் படப்பிடிப்பு என்று அனைத்தையும் வைத்திருந்தார் என்றார்.
மாஸ்டர் பீஸ் நிறுவனர் வெங்கடேஷ் பேசும்போது……
மாஸ்டர் பீஸ் நிறுவனத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது லிங்குசாமி சார் தான். பாக்யராஜ் சார் படத்தில் இறுக்கமான காட்சிகளில் கூட நகைச்சுவை இருக்கும். அதை இப்படத்தில் உணர்ந்தேன் என்றார்.
இயக்குநர் ஜெகன் விஜயா பேசும்போது……
ஹலோ மைக் டெஸ்டிங் என்று ஆரம்பித்தது தான் எனது வாழ்க்கை. எனது அப்பா சவுண்ட் செட்டில் பணியாற்றினார். அப்போது மைக் வைத்திருந்தால் அவர்களை ஹீரோ மாதிரி நினைத்துக் கொள்வோம். இப்படிதான் சினிமா எனக்கு அறிமுகம்.
இன்று எது நல்ல படம் என்று தெரியாத அளவிற்கு அனைத்தும் ஒன்றாகக் கலந்து விட்டது. உதவி இயக்குநராக திருப்தியாக பணியாற்றவில்லை. 10 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறேன். எழுத்து சிறப்பாக இருந்தால் வெற்றியடைவது உறுதி. அதை என் அனுபவத்தில் கண்டேன்.
என் அம்மாவிடம் கதையைக் கொடுத்தேன். எனக்காக வைத்திருந்த இடத்தை விற்றுக் கொடுத்தார். என் நண்பர்களும் உதவியாக இருந்தார்கள். ஒரு நல்ல படத்தை எடுப்பதை விட விநியோகம் செய்வது தான் மாபெரும் சவாலாக இருக்கிறது.
லிங்குசாமி சாரின் உதவியாளர்கள் மூன்று முறை பார்த்து பிடித்ததும் சாருக்கு கூறினார்கள். பின்பு சாரும் பார்த்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் நிலைத்து நிற்க வேண்டும். என்னுடன் இவர்கள் இருந்தால், இன்னும் 10 படங்கள் இயக்குவேன். தொடர்ந்து நல்ல படங்கள் கொடுப்பேன்.
பத்திரிகையாளர்களின் விமர்சனங்களை மிகவும் மதிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.