தமிழ் சினிமாவில் சமூக அக்கறை மிக்க கதைகளையும், அழுத்தமான கலைப்படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜாவுடன் முதல் முறையாக இணையும் புதிய திரைப்படம் “மஞ்சணத்தி” இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதை சொல்லும் தனித்துவமான பாணிக்காக பாராட்டப்படும் மாரி செல்வராஜ் மற்றும் காலத்தால் அழியாத இசையை வழங்கி வரும் இளையராஜா ஆகிய இரு படைப்பாளிகளின் கூட்டணி தமிழ் சினிமாவிற்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களின் உணர்வுகளையும் ஆழமாக பதிவு செய்யும் அவரது படைப்புகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாக “மஞ்சணத்தி” உருவாகிறது.
இசை உலகில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தனித்துவமான ஆளுமையாக விளங்கி வரும் இசைஞானி இளையராஜா, ஆயிரக்கணக்கான பாடல்களையும் மறக்க முடியாத பின்னணி இசைகளையும் வழங்கியுள்ளார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை உள்ளிட்ட பல்வேறு இசை வடிவங்களை ஒருங்கிணைத்து தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணங்களை அளித்தவர். கதையின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் அவரது இசை, “மஞ்சணத்தி” திரைப்படத்திற்கும் மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வாழை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நவ்வி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படைப்பாக “மஞ்சணத்தி” உருவாகிறது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் வழங்கும் இந்த திரைப்படத்தை ஃபார்சூன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சுஷாந்த் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார்.
இதேவேளை, தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் தனுஷுடன் மாரி செல்வராஜ் இணையவுள்ள பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படத்தின் பணிகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மாரி செல்வராஜ் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுடன் மாரி செல்வராஜ் பணியாற்றும் படத்திற்கான விரிவான வரலாற்று ஆய்வுகள் மற்றும் மிகப்பெரிய அளவிலான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அந்தத் திட்டத்தின் இடைவேளையில் “மஞ்சணத்தி” திரைப்படம் உருவாகவுள்ளது. குறிப்பாக, ‘வாழை’ திரைப்படத்தைப் போல மனதுக்கு நெருக்கமான, மண்ணின் மணம் வீசும் வாழ்வியல் படைப்பாக “மஞ்சணத்தி”யை மாரி செல்வராஜ் உருவாக்கவுள்ளார். அதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மாரி செல்வராஜின் தனித்துவமான கதை சொல்லல், இசைஞானி இளையராஜாவின் மாயாஜால இசை மற்றும் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைக்களம் ஆகியவற்றின் சங்கமமாக உருவாகும் “மஞ்சணத்தி”, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரே வருடத்தில் இருவேறு படங்களில் தமிழ் திரையுலகின் இசை ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் இசைபுயல் ஏ.ஆர்.ரஹமான் உடன் இயக்குனர் மாரி செல்வராஜ் பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












