பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா (வயது 84).நேற்று அதிகாலை வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார்.பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டவுடன், தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டுக்கு நேரில் சென்று, அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு, தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அவரது உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினி,கமல்,உள்ளிட்ட ஒட்டு மொத்த திரைத்துறையினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகையும், ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இரவு 9 மணி வரை சென்னை நீலாங்கரை வீட்டில் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை அவரது சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.அதன்படி, நேற்று இரவு 9 மணியளவில் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு உடல் வந்து சேர்ந்தது. பாரதிராஜாவின் உடளுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில்,வத்தலக்கண்டு பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு, முன்னாள் முதலமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம்,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,பாடலாசிரியர் வைரமுத்து உள்பட பலர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் கருணாஸ் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகைகள் சுஹாசினி,ராதிகா, நிரோஷா,தீபா,இயக்குனர்கள் ஆர்.கே. செல்வமணி,பேரரசு,ராம்,வெற்றி மாறன், பார்த்திபன், அமீர் பொன்ராம், உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
.இதையடுத்து மதியம் நான்கு மணி அளவில்,அடக்கம் செய்யும் இடத்திற்கு பாரதிராஜாவின் உடல் கொண்டு வரப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது பாரதிராஜாவின் மகள் ஜனனி அவருக்கு இறுதி சடங்குகள் செய்தார்..தொடர்ந்து காவல்துறையினர் பரேட் நடந்தது. அதில் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டனர். மொத்தம் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.












