இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதையின் நாயகனாகக் களம் இறங்கியுள்ள ‘டிசி’ (DC) திரைப்படம் தியேட்டர்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வன்முறையும் எளியவர்களின் அரசியலும் பேசும் இத்திரைப்படத்தின் முழுமையான திரை விமர்சனத்தை காண்போம்.
சிறு வயதிலேயே சட்டத்தின் பிடியில் சிக்கி, சிறைவாசம் முடித்துத் திரும்பும் ஒரு முரட்டு இளைஞனின் கரடுமுரடான வாழ்க்கைப் பயணமே இத்திரைப்படத்தின் மையக்கதை. தாயை இழந்து, தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் நாயகனின் வாழ்வில் எதிர்பாராத திருப்பமாக காதலும் நுழைகிறது.
அவன் செய்யும் சில சட்டவிரோத செயல்களுக்காகக் காவல்துறையினர் அவனையும் அவனது கூட்டாளிகளையும் தீவிரமாக வேட்டையாடத் தொடங்குகின்றனர். போலீஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடும் வழியில் சஞ்சனா -வின் அறிமுகம் கிடைக்கிறது. அவளது நட்பால் நாயகனின் குணம் மாறத் தொடங்கும் வேளையில், துரதிர்ஷ்டவசமாக போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சஞ்சனா உயிரிழக்கிறார்.
மீண்டும் தப்பியோடும் லோகேஷ், நரக வேதனையான சூழலில் விபச்சார விடுதியில் சிக்கித் தவிக்கும் வாமிகா கபியைச் சந்தித்து, அவளை அந்த அவல நிலையில் இருந்து மீட்டெடுக்கிறார். இறுதியில், தன்னை வேட்டையாடிய போலீஸாருக்கு எதிராக நாயகன் எப்படிப் பழிதீர்க்கிறார்? என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை.
வழக்கமான தனது பாணியில் இரத்தமும் சதையும் நிறைந்த ராவான காட்சியமைப்புகளை இதிலும் கையாண்டுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் அளவிற்குக் கொடூரமான வன்முறைக் காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருந்தாலும், அவற்றை அனிருத்தின் அசாத்திய பின்னணி இசையோடு இணைத்து பார்வையாளர்கள் ரசிக்கும்படி நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்.
அதே நேரத்தில், வன்முறைக்கு மத்தியில் தேவதாஸ் – சந்திரா ஜோடியின் மென்மையான காதல் மலரும் காட்சிகள், படத்தின் ரத்தக் கறைகளைத் துடைத்து பார்வையாளர்களை ஒரு அழகான உணர்வுக்குள் கடத்துகின்றன. “அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகும் எளிய மக்கள் திருப்பி அடிப்பது வன்முறையாகக் கருதப்பட்டாலும், தற்காப்பிற்காக அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்ற அழுத்தமான சமூகக் கருத்தை இயக்குநர் இதில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.
திரைக்குப் பின்னால் மிரட்டிய லோகேஷ் கனகராஜ், இதில் ‘தேவதாஸ்’ என்ற அதிரடிக் கதாபாத்திரத்தின் மூலம் திரைக்கு முன்னால் நாயகனாக கம்பீரமாக அறிமுகமாகியுள்ளார். கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ற கச்சிதமான உடல்மொழி மற்றும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் இவரது வேகம் திரையரங்கில் கைதட்டல் பெறுகிறது.
துன்பங்கள் நிறைந்த நரக வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்ணாக வாமிகா கபி (சந்திரா) நடித்துள்ளார். வசனங்களை விடத் தனது சிறப்பான உடல்மொழி மூலமாகவே கதாபாத்திரத்தின் வலியைப் பார்வையாளர்களிடம் கடத்தியுள்ளார். மற்றொரு நாயகியான சஞ்சனா ஏ.கே சில காட்சிகளே வந்தாலும், கதையின் போக்கை மாற்றும் அவரது கதாபாத்திரத்தின் முடிவு பார்ப்பவர் மனதை கனக்கச் செய்கிறது.

இவர்களுடன் படத்தில் நடித்துள்ள தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத் மற்றும் அட்டுல் ஆகியோர் தங்களுக்குரிய பாத்திரங்களை உணர்ந்து நேர்த்தியான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட தூணாக அனிருத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. படம் முழுவதும் ரத்தமும் வன்முறையும் நிறைந்த காட்சிகளைக் கூட ரசிகர்கள் எவ்வித நெருடலும் இன்றி ரசிப்பதற்குக் காரணம் அனிருத்தின் அசாத்திய பிஜிஎம் (BGM) தான். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியின் எமோஷனையும் தனது இசையால் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி ஆக்ஷன் காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். படம் முழுவதும் ஒரே விதமான வண்ணக் கலவையைப் (Color Palette) பயன்படுத்திப் பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றச் செய்துள்ளார். வித்தியாசமான கேமரா கோணங்கள் மற்றும் விறுவிறுப்பான கேமரா நகர்வுகள் சாதாரண காட்சிகளையும் சுவாரஸ்யமாக்கியுள்ளன.
அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும், அதைத் தேவையற்ற திணிப்பாக மாற்றாமல் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப மிகக் கச்சிதமாக வெட்டியுள்ளார் படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா. இவரது நேர்த்தியான எடிட்டிங் படத்திற்குப் பெரிய பலம்.
வன்முறைக்கு நடுவே மனதைத் தொடும் தேவதாஸ் – சந்திரா ஜோடியின் காதல். படத்தின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்திய அனிருத்தின் இசை மற்றும் முகேஷ் ஜியின் ஒளிப்பதிவு. அடக்குமுறைக்கு எதிராக எளியவர்கள் திருப்பியடிக்க வேண்டும் என்ற இயக்குநரின் ஆழமான அரசியல் கருத்து. நாயகனாக லோகேஷ் கனகராஜின் மிரட்டலான அறிமுகம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள். படத்தின் பலமாக இருக்கிறது.
அதிதீவிர வன்முறை படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் காட்சிகள் தூக்கலாக இருப்பதால், பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கும் குடும்பத்துடன் வரும் ரசிகர்களுக்கு சற்று அயர்ச்சியை ஏற்படுத்தலாம்.
காவல்துறையின் அத்துமீறல்களுக்கு எதிராகத் தனிமனிதன் நடத்தும் இந்த ஆக்ஷன் வேட்டை, சர்வதேசத் தரத்திலான மேக்கிங் மற்றும் ராவான ஆக்ஷன் படங்களை விரும்புபவர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தும்.












