
எழுத்து,இயக்கம் :அன்பழகன். ஒளிப்பதிவு : ராசமதி .இசை ; ஜஸ்டின் பிரபாகரன் . பாடல்கள் : யுகபாரதி, தேன்மொழி தாஸ்.
சமுத்திரக்கனி ,தம்பி ராமையா ,அதுல்யா ரவி. ராஜஸ்ரீ பொன்னப்பா.
***************
எந்த அளவுக்கு கல்லூரிகளில் நச்சு விதைகளை மாணவர்களிடம் சாதி விதைக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிற படம். மணிக்கட்டில் கட்டியிருக்கிற கயிறு சாமிக் கயிறா,சாதிக் கயிறா என்கிற சந்தேகம் சிலரைப் பார்க்கிறபோது வந்து தொலையும் .அந்த அளவுக்கு அழுத்தமுடன் சொல்லியிருக்கிறார்கள். சாதி வெறியர்களின் தோலை இயக்குநர் அன்பழகனின் சாட்டை திருக்கை வால் கொண்டு உரித்திருக்கிறது. ஆனால் எவன் திருந்துவான் , வசனங்கள் அழுத்தமானவையாக இருந்தும் கூட?
கல்லூரி பிரின்சிபால் தம்பி ராமையா சாதி வெறியர். இவருக்கு ஜால்ரா தட்டுவதற்கு கூடவே பேராசிரிய கைத்தடிகள். தம்பி ராமையாவின் மகனும் அப்பனைப் போலவே.! தமிழ்ப் பேராசிரியர் சமுத்திரக்கனிதான் சாதி மறுப்பாளர் என்பதை சொல்லத் தேவையில்லை. தானாகவே புரிந்து கொள்ளலாம்.தங்கள் சாதி பெண்ணுடன் இன்னொரு சாதி பையன் பழகுவதா என்பதில் ஆரம்பிக்கிறது மாணவர் பிரிவினை. இதை எப்படி சமுத்திரக்கனி சாமர்த்தியமாக கையாளுகிறார் என்பதுதான் மொத்தக் கதை
.
பிரசார நெடி அதிகமாகவே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இவரது ஆர்ப்பாட்டமும் அதிகம்தான். அடங்கி வாசித்திருந்தால் ஒரு சகுனியின் வீரியம் இருந்திருக்கும். அதிகார பலம்,ஆதிக்க மனப்பான்மை ,சாதி வெறி உள்ள சில தலைவர்கள் அடக்கி வாசித்து உயிர்களை பறிப்பதை இயக்குநர் அன்பு பார்க்கவில்லையா என்னவோ!
பழுது இல்லாத கேரக்டர் கனியினுடையது. மாணவர்களை நல்வழிப் படுத்துவதற்கு இவர் கையாளும் யுத்திகள் வரவேற்கப்படவேண்டியவை. மாணவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதற்கு நல் உதாரணம். சக பேராசிரியையுடனான அசிங்கமில்லாத காதலை அழகாக காட்டியிருக்கிறார்கள்..
ராசமதியின் ஒளிப்பதிவு ,ஜஸ்டின் பிரபாகரின் இசை ,யுகபாரதியின் வரிகள் கதைக்கு உறுதுணையாக இருக்கின்றன.
அரசாங்கம் செய்யவேண்டிய வேலையை அடுத்த சாட்டை செய்திருக்கிறது. இந்த படத்தை அரசு ஆதரிக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால் செய்வார்களா?












