போக்குவரத்து வசதிகள் அறவே அற்ற, சாதிய ஏற்றத்தாழ்வில் சிக்கிய குக்கிராமம். அந்த கிராமத்தில் ஒருவராக வசித்து வருபவர், நாயகன் ராம் சரண். அரசியல் ரீதியாகவும் அங்கீகாரமில்லாத அந்த கிராமத்திற்கான அங்கீகாரத்தை பெற்று, போக்குவரத்து வசதியை உருவாக்க, மல்யுத்த வீரர் சிவ ராஜ்குமாரிடம் மல்யுத்த பயிற்சி பெறுகிறார். சில நாட்களிலேயே சிறந்த மல்யுத்த வீரராக உருவாகிறார். இவரது வளர்ச்சி பிடிக்காத மற்றொரு மல்யுத்த வீரரால், போட்டியில் பங்கேற்க இயலாத வகையில் இவரது காலில் காயம் ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஒரு அசாதாரண காரியத்தை செய்து போட்டியில் பங்கேற்கிறார். அது என்ன? தனது கிராமத்திறகான அங்கீகாரத்தை பெற்றாரா? ‘பெத்தி’.
பெத்தி படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார், ராம் சரண். மல்யுத்த வீரருக்கான உடலமைப்புடன் திரையில் தோன்றி ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்துகிறார். அதோடு துடிப்பான நடன அசைவுகளோடு பாடல் காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். ஸ்ருதிஹாசனோடு ஆடும் பாடல் காட்சி ஒன்ஸ் மோர் ரகம். தனது கிராமத்திற்காக தன்னை வருத்தி அவர் செய்யும் செயல்கள் ரசிகரகளிடம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

நாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. கவர்ச்சி பதுமையாக வந்து செல்கிறார். அவருடைய காட்சிகள் திரைக்கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஸ்ருதிஹாசன் ஒரு கவர்ச்சி பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்துகிறார். மல்யுத்தம் பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சிவ ராஜ்குமார். கம்பீரமாக காட்சியளிக்கிறார். வெறும் பார்வையினாலேயே நடித்து விட்டுப்போய் விடுகிறார்.
ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி ஆகியோரும் சிறப்பான முறையில் திரைக்கதைக்கு பங்களித்துள்ளனர். ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
இந்தியா டிஜிட்டல் மயமாகி விட்டது. என மார்தட்டிக்கொள்ளும் இந்த நேரத்தில் இன்னும் பல குக்கிராமங்கள், அடிப்படை வசதிகளற்ற நிலையில் தான் இருக்கிறது. எனும் உண்மையை சொல்லி, தனது கிராமத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கும் இளைஞனின் போராட்டமிக்க வாழ்க்கையை கமர்ஷியல் விருந்தாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் புச்சி பாபு சனா.
மொத்தத்தில், ‘பெத்தி’ – சாதனை வீரன்!












