பாரி இளவழகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம், அன்பே டயானா. அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்திருக்க இவர்களுடன் சேத்தன் கடம்பி, ரோஜா செல்வமணி, கோபி அரவிந்த், செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னை, பெரம்பூரில் தாய்மொழி உள்ளிட்ட மற்ற அடையாளங்களை தொலைத்துவிட்டு, வாழும் ஒரு தெலுங்குக் குடும்பத்தின் தலைவி ரோஜா செல்வமணி. கணவர் சேத்தன், பிள்ளைகள் இஸ்மத் பானு, பாரி இளவழகன், சுதர்சன் என, மொத்த குடும்பத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனது சொந்த ஜாதியின் மீது அதீத பற்று கொண்டவர். அவரது ஜாதி சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவரது மகன் பாரி பள்ளிப் படிக்கும் காலத்திலிருந்தே ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சார்ந்த பெண் ரம்யா ரங்கநாதனை காதலித்து வருகிறார். அவரது காதலை ரம்யா ஏற்க மறுத்து வருவதுடன் நல்ல நண்பனாக பாவித்து வருகிறார். இந்நிலையில் ரம்யாவிற்கு பாரியின் மீது காதல் உருவாகிறது. பாரி தயக்கத்துடன் அதை ஏற்க மறுக்கிறார். என்ன காரணம் என்பது தான் ‘அன்பே டயானா’ படத்தின் கதை.
‘அன்பே டயானா’ படத்தின் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் வெகு பொருத்தமாக அமைந்திருக்கிறார், ரம்யா ரங்கநாதன். படம் முழுவதும் குறை சொல்ல முடியாத நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறார். அந்த கதாபாத்திரத்தை வெகு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார், இயக்குநர் பாரி.

மொத்தக் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தனது அம்மா ரோஜாவிற்கு பயந்து காதலை ஏற்பதா, வேணாமா? எனும் குழப்பத்தில் வாழும் அப்பாவி கதாநாயகனாக பாரி. அக்காவிடம் பாசம் காட்டுவதிலும், அப்பாவிடம் உரிமை கோருவதும் தம்பியுடன் சண்டையிடுவதிலும் நேர்த்தியான நடிப்பு.
எதைப்பற்றியும் கவலைப் படாத தந்தை கதாபாத்திரத்தில் சேத்தன். ரோஜாவுடனான ஊடலிலும், கூடலிலும், மகனின் காதலுக்கு ஆதரவாக செயல்படும் காட்சிகளிலும் என மொத்தப்படத்தையும் கலகலப்பாக வைத்திருக்கிறார்.
பெங்களூர் தமிழனாக பரிதாபங்கள் கோபி. முதலில் அவர் பேசும் பாஷை ரசிக்க வைத்தாலும் அதன் பின்னர் போரடிக்கிறது. அவரது க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர்!
ரோஜாவின் தம்பியாக நடித்திருக்கும் செல் முருகன், ரகளை. மற்றபடி நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
பெரம்பூரில் பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஷாலிமார், விசாலாட்சி மில்க் சென்டர், சிட்டம்மாள் பர்மா கடை, ரயில் நிற்கும் மற்றும் பல இடங்களை காட்சிகளில் இடம்பெற செய்திருப்பது கதை களத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்டும், ஆர்ட் டைரக்டரும் பாராட்டுக்குரியவர்கள்.
பரத் சங்கர் பின்னணி இசை பரவாயில்லை. ‘’விலகாதே’’ படல் நன்றாக இருக்கிறது.
எழுதி, இயக்கி நடித்திருக்கும் பாரி இளவழகன், திரைக்கதையில் இன்னும் சுவாரசியம் சேர்த்திருக்க வேண்டும். பல இடங்களில் தொய்வான திரைக்கதையும், படம் முழுவதுமே மாண்டேஜ்ஜில் செல்வது போன்ற உணர்வும் ஏற்படுவதையும் தவிர்த்திருக்கலாம். அடையாளங்களை தொலைத்துவிட்ட ஒரு தெலுங்குக் குடும்பம். ஐரோப்பியர்களால் இரண்டாம் தரமாக பார்க்கப்பட்ட ஒரு ஆங்கிலோ இந்தியக்குடும்பம் இவர்களுக்குள்ளான ஜாதிமத அரசியலை மேம்போக்காக சொல்வதை தவிர்த்து, இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
மற்றபடி ‘அன்பே டயானா’ பரவாயில்லை!












