அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிகாரிகா, , ஏஞ்சலின், அஞ்சுகுரியன், சுதாகர் , யாஷாஸ்ரீ ,ஜோனிடா, நட்டி நடராஜ், தமன் எஸ் , சின்னி ஜெயந்த், ரக்சன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா மற்றும் சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
பள்ளியில் படித்துவரும் அதர்வா, தன்னுடன் டியூஷனில் படிக்கும் சக மாணவி ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கிறார். அது கைகூடாமல் போகவே கல்லூரிக் காலத்தில் கயாடு லோஹரை காதலிக்கிறார். அதுவும் கைகூடாமல் போகிறது. இப்படி அவரது காதல் எதுவும் கைகூடாத நிலையில், அவரது மாமா நட்டி ஒரு பெண்ணை பார்த்து திருமண ஏற்பாடுகளை செய்கிறார். ஒரு சில நாட்களில் திருமணம் என்ற நிலையில், தனது பள்ளிக்காதலி ப்ரீத்தி முகுந்தனை சந்தித்து எப்படியாவது தனது காதலை சொல்லிவிடத்துடிக்கிறார். அதர்வா தனது காதலைச் சொன்னாரா, இல்லையா? திருமணம் என்ன ஆனது? என்பதை சொல்வதே ‘இதயம் முரளி ‘படத்தின் மீதிக் கதை.
காதலை, கலர்ஃபுல்லாகவும் ஜாலியாகவும் சொல்ல நினைத்திருக்கிறார், அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை. அழுத்தமில்லாத திரைக்கதையில் தேவையற்ற ஆடம்பரம். படம் முழுவதும் வழிந்தோடும் அப்பட்டமான செயற்கைத்தனம். முரண்பட்ட காதல் சம்பந்தமான கருத்துக்கள். இவைகள், ரசிகர்களை ரசிக்க முடியாமல் செய்துவிடுகிறது. அதர்வா காதலை சொல்ல முடியாமல் தவிப்பது போன்ற காட்சிகள் அப்பட்டமான செயற்கைத்தனம்! காதலை சொல்ல எந்தவிதமான இடையூறும் இல்லாத நிலையில் அவர் தவிப்பது படத்தின் பெரும் பலவீனம். காதலின் வலியையும், ஏக்கத்தையும் ரசிகரகளிடம் கடத்துவதில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார், இயக்குநர்.
படத்தை, தங்களது வசீகரத்தாலும் நடிப்பாலும் காப்பாற்றுபவர்கள் ப்ரீத்தி முகுந்தனும், கயாடு லோஹரும் தான். அதன் பிறகு பரிதாபங்கள் சுதாகரும், டிராவிட்டும். ரக்சன், தமன், நிஹாரிகா, ஏஞ்சலின், ஜோனிடா ஆகியோரும் திரைக்கதை நகர்வுக்கு உதவியிருக்கிறார்கள்.
சின்னி ஜெயந்த் காட்சி படத்திற்கு எந்த வித்திலும் உதவவில்லை.
மனோஜ் பரமஹம்சா மற்றும் சி ஹெச் சாய் ஆகியோரது ஒளிப்பதிவில் திருச்சி, மதுரை, அமெரிக்கா என அனைத்து காட்சிகளும் அழகுற படமக்கப்பட்டிருக்கின்றன.
இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே!
‘இதயம் முரளி’ – ஆட்கொள்ளவில்லை!












