வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் கட்சி பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறார்.தொடர்ந்து கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 22-ந்தேதி விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இம்மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதால் அதற்கேற்ற வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. மாநாடு நடைபெறும் இடத்தை விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பல ஏக்கரில் பார்க்கிங் வசதி, உணவுக் கூடம் அமைக்கப்பட இருக்கிறது.மாநாட்டில் தொண்டர்கள் எடுத்து வருவதற்கு வசதியாக கட்சியின் புதிய கொடியை நாளை காலை 9 மணிக்கு சென்னையில் விஜய் அறிமுகப்படுத்துகிறார்.இதற்காக பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன்பு 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் கொடி கம்பத்தில் ‘மாதிரி’ கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தனர். கொடி ஏற்றுவதை கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டனர். 22-ந்தேதி கட்சியின் அறிமுக விழா நடைபெறுவதை தொடர்ந்து விழாவுக்கு 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் காலை 6 மணிக்கு பனையூர் அலுவலகம் வர உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கென தலைமை அலுவலகத்தில் சிறப்பு பந்தல் போடப்பட்டு வருகிறது.அனைவருக்கும் காலை மதியம் விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் முன்னிலையில் சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் வெற்றியை குறிக்கும் வாகைப்பூ நடுவில் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்சி கொடியை அறிமுகம் செய்வதுடன் கொடிக் கம்பத்திலும் விஜய் கொடி ஏற்றி வைக்கிறார்.(சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றியை உணர்த்தும் வாகை பூக்களை சூடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது )
தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு படிப்படியாக கட்சி கொடி வழங்கப்படுகிறது. கட்சிக் கொடி கிளை, நகரம், ஒன்றியம், மாநகரம் வாரியாக ஏராளமான இடங்களில் மாநாட்டுக்கு முன்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளால் ஏற்றி வைக்கப்பட்ட உள்ளது .இதைத் தொடர்ந்து மாநாட்டு பணிகள் தொடங்க இருக்கிறது. மைதானம் சீரமைப்பு, பந்தல், உணவு காண்டிராக்டர் மற்றும் பல்வேறு முன் ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.












