புதிய சிந்தனைகளுடன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் ஆம்பிஷியஸ் புரொடக்ஷன் ஹவுஸ் தொடர்ந்து புதுமையான கதைகளை உருவாக்கி நம்பி்க்கைக்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தனது இரண்டாவது படைப்பான ’சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் மூலம் இதுவரை காணாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’3.33’ கதைக்களம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களுடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது ’சூப்பர் பி மேன்’ மூலம் ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன் பிரம்மாண்ட களத்திற்குள் நுழைந்துள்ளது. ‘சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஃபேண்டஸி உலகத்தையும் அதிரடி சர்வைவல் கதையையும் இணைக்கும் இதன் கிளிம்ப்ஸ் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி. ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ’3.33’ திரைப்படத்தின் இயக்குநரான நம்பிக்கை சந்துரு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக மாறுவது படத்தின் ஹைலைட் தருணங்களில் ஒன்று.படத்தின் மற்ற நடிகர்கள், குறிப்பாக நாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
படத்தில் உயர்தர தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. ’பிந்தம்’, ’3.33’, ’மாங்கோ முனி’ மற்றும் வரவிருக்கும் இந்தி படத்தில் பணியாற்றிய சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவை கையாண்டு்ள்ளார். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ’அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹர்ஷவர்தன் படத்திற்கு இசையமைக்கிறார். ‘அனிமல்’ படத்திற்காக அவர் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
’3.33’, ’சிவகுமாரின் சபதம்’ மற்றும் வரவிருக்கும் ’பிளெடி பாலிடிக்ஸ்’படங்களில் பணியாற்றிய தீபக் எஸ் எடிட்டிங்கை மேற்கொள்கிறார். ‘அன்னபூரணி’ மற்றும் பல மலையாள படங்களில் பணியாற்றிய சுகன் சண்டைப் பயிற்சியை கவனிக்கிறார். காஸ்ட்யூம் டிசைனை ’லோகா’, ’மின்னல் முரளி’ படங்களில் பணியாற்றிய மெல்வி ஜே மேற்கொள்கிறார். ஒலி வடிவமைப்பை ’அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சச்சின் சுதாகரன் கவனிக்கிறார்.
இயக்குநர் டி. ஜீவிதா கிஷோர் கூறுகையில், ”ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் கலந்த சுவாரஸ்ய கதைதான் ‘சூப்பர் பி மேன்’. நிஜத்தன்மை கொண்ட சூப்பர் ஹீரோ கதையாகவும் அதேசமயம் விஷூவலாக ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரவேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். புதிய நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன், தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறோம். இந்தக் கதையின் உலகத்தை முதல் பார்வை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். படத்தில் இருந்து இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் அடுத்தடுத்து வரவிருக்கிறது” என்றார்.
புதிய ஜானர், திறமையான நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக்குழுவுடன், ’சூப்பர் பி மேன்’ தமிழ் ரசிகர்களுக்கு நியூ ஏஜ் சூப்பர் ஹீரோ அனுபவத்தை தர இருக்கிறது. படத்தின் முதல் பார்வை வெளியீடு இந்த சுவாரஸ்யமான பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. படத்தில் இருந்து மேலும் பல அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












