அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ. பழனிச்சாமி தயாரிப்பில் சங்கிலி சிபிஏ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘வட மஞ்சுவிரட்டு’ .இந்தப் படத்தில் ‘முருகா’ அசோக் ,யாழினி முருகன், பக்கோடா பாண்டி ,நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு ஈஸ்வரன் கார்த்திகேயன், இசை முகேஷ் முனுசாமி.இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் கார்த்திகேயன் பேசும்போது,
” நாங்கள் பணியாற்றிய பைலட் படம் மூலம் இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படக்குழுவினர் நன்றாகப் பழகினார்கள் . கதாநாயகன் அசோக் மிகவும் நெருக்கமான நண்பராகி விட்டார்” என்றார்.
இசையமைப்பாளர் முகேஷ் முனுசாமி பேசும்போது,
” நான் சென்னையில் இருப்பவன்.’வட மஞ்சுவிரட்டு’ ஒரு கிராமத்துக் கதை என்ற போது முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது .ஆனால் என்னை அங்கே கொண்டு சென்று விட்டார்கள். ஒப்பாரிப் பாடல் என்றார்கள். அதுவும் ஒரு மாடு இறந்து விட்டதற்கு ஒப்பாரி என்றார்கள். இருந்தாலும் அதை சரியாக கொண்டு வரும் படி இயக்குநர் ஊக்கப்படுத்தி வேலை வாங்கினார். நடிகர் அசோக் படம் பற்றித் தினமும் இரண்டு மணி நேரம் பேசுவார்.
என் பள்ளிக் காலத்தில் நான் 12-ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளிக்கு அசோக் விருந்தினராக வந்தார். எனக்குப் பரிசெல்லாம் கொடுத்தார் . அவர் நடித்த படத்திற்கு இசையமைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் நாட்டுப்புறப் பாடல் ,திருவிழாப் பாடல், காதல் பாடல் ,ஒப்பாரிப்பாடல் என்று வித்தியாசமான பாடல்களைக் கொடுக்க முடிந்தது . அனைவருக்கும் நன்றி” என்றார்.
சண்டை இயக்குநர் மிரட்டல் செல்வா பேசும் போது,
” இந்தப் படத்தில் இயக்குநரின் உழைப்பைப் பார்த்தே படத்தின் வெற்றி உறுதியாக விட்டது. அசோக் நல்ல ஈடுபாடு உள்ள நடிகர் .சண்டைக் காட்சிகளில் தயக்கம் இல்லாமல் நடித்தார் .நான் பிரபலமான பல கதாநாயகர்களின் படங்களுக்குச் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறேன்.இதில் காளைகளை வைத்துச் சண்டைக் காட்சிகள் அமைத்தது மறக்க முடியாதது”என்றார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜா பேசும்போது ,
“ஒரு படத்திற்குத் தயாரிப்பாளர் தான் முக்கியம் .அவர்தான் ஒரு படத்திற்கு மூல காரணம். சிறுபடங்களுக்கு எல்லாம் குரல் கொடுத்தவர் யாருக்கும் அஞ்சாமல் பேசுபவர் கே .ராஜன் அவர்கள் அண்மையில் மறைந்து விட்டார்கள் .ஆனால் திரை உலகில் அந்தத் தயாரிப்பாளரின் மரணத்தை எளிதாகக் கடந்து போய்விட்டார்கள். இதுவே ஒரு கதாநாயகனின் மரணம் என்றால் அவரது இறுதிச் சடங்கில் திரையுலகமே திரண்டு வந்து இருக்கும்.இதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. தயாரிப்பாளர்களை மதியுங்கள். கே.ராஜனிடம் வாங்கி இருந்த பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுங்கள் .அவரது ஆவி வந்து பழி வாங்குவதற்குமுன் , தானாக வந்து கொடுத்து விடுங்கள்” என்றார்.
கதாநாயகி யாழினி முருகன் பேசும் போது,
” இங்கே பேசுவதற்கு எனக்கு மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது .வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி .எனக்கு இந்தப் படத்தில் நடிப்பது ,அந்த வட்டார மொழி பேசுவது , அங்கே உள்ள பாத்திரத்தைப்போல் உடல் மொழி வெளிப்படுத்துவது போன்றவற்றில் சிரமமாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் என்னை ஊக்கப்படுத்தி அந்தக் கதாபாத்திரத்தில் சரியாக நடிக்க வைத்தார்கள். படத்தின் கதாநாயகன் அசோக் சகஜமாக இருந்து என்னை சௌகரியமாக வைத்துக் கொண்டார் . அதனால் தான் என்னால் சுலபமாக நடிக்க முடிந்தது” என்றார்.
சிறு படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் பேசும்போது ,“நான் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று காலையில் தஞ்சாவூரில் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு மதியம் 12:45க்கு கிளம்பி 4.45 க்கு நான்கு மணி நேரத்தில் சென்னை வந்து சேர்ந்தேன். அவ்வளவு வேகமாக காரை ஓட்டிக்கொண்டு சென்னை வந்தேன். இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் இவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவ்வளவு வேகமாக வந்தேன்.படத்தின் அசோக் நடித்த காட்சிகளைப் பார்த்தபோது பருத்திவீரன் கார்த்தி நினைவு வந்தது.
அசோக் நல்ல அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார் .சினிமாவில் ஏமாற்றாமல் இருந்தால் சினிமா உங்களை ஏமாற்றாது காப்பாற்றும். சினிமா என்றும் யாரையும் கைவிடாது. அடுத்த பருத்திவீரன் போல அசோக்கிற்கு இந்தப் படம் அமையும் ” என்றார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கச் செயலாளர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது ,
“நடிகர் அசோக்கிற்கு ஒரு நல்ல எதிர் காலம் காத்திருக்கிறது. இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டியவர் .எம்ஜிஆர் ‘சந்திரலேகா’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் சிப்பாயாக நடித்திருப்பார் .அதற்கு சம்பளம் நாலணா என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.எந்தத் துறையிலும் முயற்சி முக்கியம். ஒருவர் கஷ்டப்பட்டால் தான் எந்தத் துறையிலும் வர முடியும். என்னுடன் 10 பேர் திரைப்படக் கல்லூரியில் படித்தார்கள் .ஆனால் ஒன்பது பேர் இயக்குநராக முடியவில்லை.
அவர்கள் என்னைவிட அறிவாளியாக இருந்தாலும் வர முடியவில்லை.
சினிமாவில் திறமை அறிவு மட்டுமல்ல கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் . சினிமாவில் ஜாதகத்தில் கட்டம் நன்றாக இருக்க வேண்டும்.அப்போதுதான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். இன்று ஏகப்பட்ட படங்கள் எடுக்கிறார்கள். ஆனால் எடுத்த படத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு மோசமாக இருக்கின்றன.தமிழ் சினிமாவைக் கெடுப்பதும் சில தயாரிப்பாளர்கள் தான் .நல்ல கதை கேட்டு நல்ல இயக்குநரைத் தேர்ந்தெடுத்துப் படம் தயாரித்தால் இவ்வளவு மோசமாக அந்தப் படங்கள் இருக்காது. ஆனால் அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் யாரிடமாவது கொடுக்கிறார்கள். எங்கள் சங்கத்தில் இருந்து நல்ல இயக்குநர் இருக்கிறார்களா நல்ல கதை இருக்கிறதா என்று எந்தத் தயாரிப்பாளரும் கேட்பதில்லை . கதையை வைத்துதான் நல்ல படம் அமையும். நானும் ‘ராஜகுமாரன்’ படத்தில் ஒரு மஞ்சுவிரட்டு பாடல் எடுத்தேன். ஆனால் அந்தப் படத்தில் மாட்டை வைத்து எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும் . இதில் அச்சு அசலாக மாடு தோன்றும் அந்தக் காட்சிகள் வந்துள்ளன. தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது .சினிமாவில் உள்ள துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லை .அது இருந்தால் தான் காப்பாற்ற முடியும் .மும்பையில் 70 ரூபாய்க்கும் டிக்கெட்டுகள் உண்டு. இங்கே எதற்கெடுத்தாலும் டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது. படம் பார்க்க முடியவில்லை
இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண வேண்டும் “என்றார்.

கதாநாயகன் அசோக் பேசும்போது,
” இப்போது இங்கே இதை ஒரு குடும்ப விழா போல் உணர்கிறேன்.பெரிய மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. பெரியவர்கள் வந்து எனக்கு ஆசீர்வாதம் கொடுத்திருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் மூத்தவர்களின் பட்டியலில் கே. ராஜன் அவர்களின் பெயரும் இருந்தது. அவர்களை நாங்கள் தவற விட்டு இருக்கிறோம். அவர் பேசுவார் திட்டுவார் என்பார்கள் ஒரு தாத்தா போல் அவர் மூத்தவராக பொறுப்போடுதான் அக்றையாகவே கருத்து சொல்லுவார். அவருக்குப் பிறகு தான் அந்த வெறுமை எனக்குத் தெரிகிறது.அவர் இல்லாத வெற்றிடத்தை உணர்கிறோம். இந்தப் படத்தின் மூலம் ஒரு புது வாழ்வியலை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படத்தில் பணியாற்றிய இயக்குநரின் படை எல்லாவற்றையும் சாத்தியமாக்கியது. ஒரு எழுத்தாளர் புத்தகம் போட்டு விடலாம் ,நடிகர்கள் மேடையில் நடித்து விடலாம் ,ஆனால் ஒரு படம் எடுப்பது அப்படி அல்ல .மிகவும் சிரமமானது .புதிய தயாரிப்பாளர் அவ்வளவு சிரமப்பட்டு செலவு செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.இந்தப் படத்தின் வியாபாரத்திற்கு அனுபவம் உள்ளவர்கள் உதவ வேண்டும். இந்தப் படத்தில் சின்ன சின்ன சத்தங்களுக்கு கூட இசையமைப்பாளர் மிகவும் மெனக்கட்டார் பாடுபட்டார். இந்த படத்தில் பட்டாணி என்ற மாடு நடித்திருக்கிறது .அது மட்டும் இல்லை அந்த மண்ணில் வட்டார வழக்கு பேசிடும் உள்ளூர் மனிதர்களும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பின் போது நல்ல நல்ல மக்களைச் சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது மாதிரி மாடு பிடிக்கும் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூறினார் ‘ஒன்று வெற்றி இல்லையேல் வீர மரணம் ‘என்றார்.அவர் பேசிய பேசியதே படத்தில் வசனமாக வருகிறது. மஞ்சுவிரட்டு என்பதில் பல வகை உள்ளன என்று இந்தப் படத்தில் இருந்து தான் தெரிந்து கொண்டேன். யாழினி அற்புதமாக நடித்திருக்கிறார் அருமையான சக நடிகையாக இருந்தார்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும் போது
“முதலில் தமிழக முதல்வருக்கு நன்றி .திரையரங்குகளில் சனி ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் 5 காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி கொடுத்த முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் . திரையுலகிற்கு முதல் முறை ஒரு விடிவு காலம் பிறந்து இருக்கிறது.
மஞ்சுவிரட்டில் வட மஞ்சுவிரட்டு என்பது வடத்தைப் பயன்படுத்தி நடத்தப்படுவதாகும். தேரோட்டத்தில் தேரை இழுக்கும் கயிறுக்குத்தான் வடமென்று பெயர்.அதேபோல் மாடுபிடிக்கும் கயிறுதான் வடம் என்று சொல்லப்படுகிறது. மாட்டுக் கயிறுக்கு மட்டுமே அப்படி ஒரு சிறப்பு உண்டு.அப்படி வடத்தில் கட்டி இந்த மஞ்சுவிரட்டு நடத்துவதால் வட மஞ்சுவிரட்டு என்று பெயர் .மற்ற காளைப் போட்டிகளை விட வட மஞ்சுவிரட்டு போட்டி கொஞ்சம் பாதுகாப்பானது. இந்தப்படத்தில் மாடு இறந்ததற்காக ஒப்பாரிப் பாடல் வருகிறது. கிராமங்களில் மாட்டை மனிதர்களைப் போல நேசிப்பார்கள்.300 ஏக்கர் 400 ஏக்கர் என்று சொத்து வைத்த தந்தைக்குக் கூட சமாதி கட்டுவதில்லை. ஆனால் மாடுகளுக்குச் சமாதி கட்டுவது உண்டு.அந்த அளவிற்குக் கிராம மக்கள் மாடுகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நேசிப்பார்கள்.
இப்போது வருகிற சினிமாவில் கிராமங்களைக் காட்டுவது குறைந்து விட்டது. கதாநாயகர்கள் க்ரைம் திரில்லர் என்று துப்பாக்கி குண்டு கொலை என்றுதான் படம் எடுக்கிறார்கள்..
ஒரு கதாநாயகன் கிராமத்துக் கதைகள் கொண்ட படத்தில் நடித்தால் தான் முழுமையான கதாநாயகனாக மாறுவார்.
எம்ஜிஆருக்கு ஒரு மதுரை வீரன்,
சிவாஜிக்கு ஒரு பட்டிக்காடா பட்டணமா ,ரஜினிக்கு ஒரு முரட்டுக்காளை ,கமலுக்கு ஒரு சகலகலா வல்லவன்,விஜய்க்கு கிராமத்துக் கபடியை வைத்த ஒரு கில்லி ,அஜித்துக்கு ஒரு வீரம், சூர்யாவுக்கு ஒரு சிங்கம் ,கார்த்திக் கு ஒரு பருத்திவீரன் என்று கிராமத்துக் கதைகளில் நடித்த பிறகு தான் அவர்கள் பெரிய நட்சத்திரம் ஆனார்கள் உச்சத்துக்குச் சென்றார்கள். அப்படிப்பட்ட படங்கள் வந்த போது தான் திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
ஒரு கதாநாயகன் முழுமையடைவது கிராமத்துப் படங்களில் நடித்த பிறகுதான்.
இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஆசைக்காக எடுக்கப்பட்ட படமாகத் தெரியவில்லை . இது தன் மகனைக் கதாநாயகனாக்க வேண்டும் என்றோ தன் தம்பியை இயக்குநராக்க வேண்டும் என்றோ எடுக்கப்பட்ட படம் இல்லை.
உண்மையிலேயே பெயர் சொல்லப்பட வேண்டும் என்று ஈடுபாட்டுடன் இதை எடுத்திருக்கிறார்கள். கதாநாயகன் நடிகர் அசோக் பெயருடன் முருகன் இருப்பதால் அந்த முருகன் என்றும் அவரைக் கைவிட மாட்டார்.
பெயர் சொல்ல வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் முழு ஈடுபட்டுடன் அனைவரும் உள்ழைத்திருக்கிறார்கள்.
காட்சிகளைப் பார்க்கும்போது இந்தப் படத்தின் தரத்தைப்பேசும் வகையில் உள்ளன.
படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்
இயக்குநர் சங்கிலி பேசும்போது,
” இந்தப் படத்தின் கதையை முதலில் நடிகர் விமலிடம் கூறினேன்.பிறகு கலையரசன், தர்ஷன், விக்ராந்த் என்று பலரிடமும் கூறினேன் .ஆனால் அனைவரும் தேதியில்லை என்று கூறினார்கள் .ஆனால் அது உண்மையான காரணம் அல்ல. இந்தப் படத்தில் காளை மாட்டுடன் நடிக்க வேண்டும் என்றுதான் அந்தக் கதாநாயக நடிகர்கள் பயந்தார்கள். ஆனால் அசோக் மட்டுமே துணிச்சலாக இந்த காளை மாட்டுடன் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார் .அதேபோல் கதாநாயகி யாழினியின் போட்டோ பார்த்த போது நாங்கள் அவரைத் தேர்வு செய்யவில்லை. ஆனால் காளையுடன் நடிக்க வேண்டும் என்று கூறிய போது பலரும் பயந்து ஓடினார்கள் .ஆனால் நான் அந்த மாட்டுடன் நடிக்கிறேன் என்று தைரியமாக வந்தார். அப்படித்தான் யாழினி இந்தப் படத்திற்கு உள்ளே வந்து அருமையாக நடித்திருக்கிறார்.இசையமைப்பா ளர் முகேஷ் கிராமத்து இசை எனக்குத் தெரியாது என்றார். . நான் சென்னைக்காரன் ஆல்பம் தான் இசையமைத்துள்ளேன் என்றார். இருந்தாலும் நாங்கள் விடவில்லை ,300 கிலோமீட்டர் தூரம் ஊருக்குள் வாருங்கள் என்று கூட்டிக்கொண்டு சென்று இந்தக் கிராமத்தை உணர வைத்தோம் அவர் சிறப்பாக இசையமைத்தார்.ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் அழகாகக் காட்சிகளை எடுத்தார்.
இந்தப் படத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது,
” நாட்டில் கொடியவர்களால் நடக்கும் சில பாலியல் கொடுமைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது .அண்மையில் நடைபெற்ற பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை என்கிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது .பாலியல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நெற்றியில் பாலியல் குற்றவாளி என்று பச்சை குத்த வேண்டும்.இப்போது தளபதி விஜய் அவர்கள் முதல்வராக இருக்கிறார்.அவருக்கு வாக்களித்தவர்களில் பாதிப் பேர் அவரை ஒரு கதாநாயகனாக நினைத்துதான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே அவர் படங்களில் நடித்திருப்பதுபோல் இரட்டை வேடம் எடுக்க வேண்டும் .அவர் முதல்வராக ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கதாநாயகனாக அவதாரம் எடுத்து தீயவர்களை வதம் செய்ய வேண்டும்.
இப்போது போலீஸ் எது செய்தாலும் குறை சொல்வது ஒரு பழக்கமாகிவிட்டது .போலீஸ் மீது பழி போடாதீர்கள் .அவர்களும் மனிதர்கள் தான்.எதற்கெடுத்தாலும் அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்கள் நமக்காகப் பாடுபடுபவர்கள் “என்றார்.
படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை இயக்குநர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார் மற்றும் பேரரசு ஆகியோர் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.
‘வட மஞ்சுவிரட்டு’ படம் வெளியாகும் முன்பே படத்தின் இயக்குநர் சங்கிலிக்கு ஒரு புது படத் தயாரிப்பாளர்கள் பத்து லட்ச ரூபாய் முன்பணம் வழங்கி வாய்ப்பு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான காசோலையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விழா மேடையில் இயக்குநர் சங்கிலியிடம் வழங்கினார்கள்.அனைவருக்கும் அழகர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் புதுகை ஏ. பழனிச்சாமி நன்றி கூறினார்.












