தமிழ் சினிமாவில் வணிக நோக்கங்களைத் தாண்டி, சமூகத்திற்கும் குடும்பங்களுக்கும் தேவையான தரமான வாழ்வியல் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனம் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் (Mother Arts International).
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம், சிறுவர்களுக்கான சிறந்த திரைப்படமாக உருவாகி ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு தமிழக அரசின் ‘சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம்’ என்ற உயரிய விருதும், அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மிக்கு ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ விருதும் கிடைத்தது. இதன்மூலம் ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம் இரண்டு தமிழக அரசு விருதுகளைப் பெற்று வரலாற்றுப் பெருமையைச் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘குரங்கு பெடல்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அடுத்த மைல்கல் படைப்பாக ‘ஆண்ட’ திரைப்படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறது. இத்திரைப்படம் இன்றைய ஜென்சி (Gen Z) தலைமுறையின் பார்வையில் தொடங்கி, பின்னோக்கிச் சென்று 1980-களின் கிராமத்து மற்றும் நகரத்து வாழ்க்கைச் சூழலை அப்படியே அச்சு அசலாக உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு “லைஃப் டைம் ஸ்டோரி”யாக (Life-time Story) உருவாகிறது. இதில் இடம்பெறும் ‘தட்சணாமூர்த்தி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தின் முழுமையான வாழ்க்கைப் பயணமே இத்திரைப்படத்தின் மையக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
வானத்தை நோக்கி கனவுகளைக் கண்ட ஒரு சாதாரண மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த யதார்த்தமான வாழ்க்கை, அவர் தன் பயணத்தில் சந்தித்த சவால்கள், உறவுகள், சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் உன்னத படைப்பாக இத்திரைப்படம் செதுக்கப்பட்டு வருகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும், மனித மதிப்புகள் மற்றும் மனிதநேயம் மாறக்கூடாது என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.புதுமுக நடிகர்கள் மற்றும் பிரம்மாண்ட படப்பிடிப்பு:யதார்த்தமான வாழ்வியலைக் கடத்த வேண்டும் என்பதற்காக, இத்திரைப்படத்தின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களிலும் புதுமுகங்களையே நடிக்க வைக்க இயக்குநர் ராசி அழகப்பன் முடிவு செய்துள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு (Cast Auditions) தற்போது மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுடனான ஆலோசனைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், கதையின் தேவைக்கேற்ப தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு அழகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வாழ்க்கையை, மனித உறவுகளை, சமூகப் பொறுப்பை மற்றும் காலத்தின் மாற்றங்களை ஆழமாகப் பதிவு செய்யவுள்ள ‘ஆண்ட’, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என்ற பலத்த எதிர்பார்ப்பு தற்போதே திரைப்பட வட்டாரங்களில் எழுந்துள்ளது












