விடுதலை’, ‘கொட்டுக்காளி’ போன்ற படங்களின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’ (Mandaadi). தமிழ் சினிமா இதுவரை அதிகம் கையாண்டிராத ஒரு பிரத்யேகக் கடலோரக் களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தின், மனதை வருடும் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்கக் கடலோர வாழ்க்கையையும், கடலின் நடுவே நடக்கும் பரபரப்பான பாய்மரப் படகுப் பந்தயத்தையும் (Boat Racing) மையமாகக் கொண்டு இந்த உணர்வுப்பூர்வமான கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பந்தயத்தின் உக்கிரம், போட்டியின் வெறி, வெற்றிக்கான போராட்டம் என ‘மண்டாடி’ திரைப்படம் ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தலைமையிலான “ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட்” (RS Infotainment Pvt. Ltd.) நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது. கடினமான கடலோரச் சூழல்களில் உழைத்துப் படமாக்கப்பட்டுள்ள ‘மண்டாடி’, அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மூலம் ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இப்படத்திற்குத் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வெளியாகி ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாடலாக “உசுரே நீதான் புள்ள” எனும் இனிமையான மெலோடி பாடல் வெளியாகியுள்ளது.
சூரி மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல், காதல் மற்றும் இருவருக்குமிடையேயான அழகான பிணைப்பை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது. இதமான மெலோடி இசை, மனதைத் தொடும் வரிகள் மற்றும் கதாநாயகன்–கதாநாயகியின் அழகான கெமிஸ்ட்ரியுடன் உருவாகியுள்ள இப்பாடல், கேட்பவர்களின் மனதில் காதலின் அழகை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சுருக்கு பைய்யா சுருங்கும் காலம் வர உன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள” எனத் தொடங்கும் மயக்கும் காதல் வரிகளைப் பாடலாசிரியர் ஜெயஸ்ரீ மதிமாறன் எழுத, பிரபல பாடகர்களான கபில் கபிலன் மற்றும் சஞ்சனா ஆகியோர் தங்களது காந்தக் குரலில் பாடி அசத்தியுள்ளனர்.
இத்திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்யுத் குமார், பாலா சரவணன், மிதுன் மற்றும் கீர்த்திகா உள்ளிட்ட பலர் தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.












