ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் – விஷால் கூறுகிறார்.
வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கும் உதவித்தொகை திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. புரட்சித்தலைவி அமரர் ஜெயலலிதா அவர்கள் முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். 2011 இல் அவர் ஆட்சியமைத்தபோது 500 ரூபாயாக இருந்த இந்த உதவித்தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்தினார். 2016 இல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க சுமார் 21 லட்சம் முதியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதை உறுதி செய்தார். ரூபாய் 4 ஆயிரத்து 600 கோடி இந்த திட்டத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் தமிழ்நாடு முழுக்கவே முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விதவைகளுக்கு வழங்கப்பட்ட உதவி தொகை கூட முறையாக கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் தனியாக வசிக்கும் லட்சக்கணக்கான ஆண், பெண் முதியோர்களுக்கு மாதா மாதம் வழங்கப்பட்ட உதவி தொகை கடந்த சில மாதங்களாக கிடைக்கவில்லை. இதனால் வயதான காலத்தில் உதவி தொகை கேட்டு தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகிறார்கள்.

பெண்களுக்கும் முதியோருக்கும் உறுதுணையாக இருந்தவர் புரட்சித்தலைவி அவர்கள். இனியும் நிலுவையில் வைக்காமல் தமிழக அரசு செவிசாய்த்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினராக பதவியேற்றிருக்கும் உயர்திரு. தினகரன் அவர்கள் அந்த தொகுதியில் இந்த உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் சரியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.