“மக்களுக்கு நன்மைதான் செய்வோம்” என்று பகவத் கீதை மீது செய்த சத்தியத்தை மந்திரிகளே மதிப்பதில்லை என்கிறபோது ‘அடடே ..சத்தியத்தை மீறிட்டேனே ‘ என்று அமிதாப் பச்சன் வருத்தப்படலாமா?
உங்களின் வேடப் பொருத்தம் பார்த்த நயன்தாரா அசந்து போய் “சூப்பர்ஜி” என்று காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கியதே போதும் ஜி! தென்னகத்தில் ஐந்து கோடி சம்பளம் வாங்குகிற ஒரே நடிகை நயன்தாராதான்!
ராயலசீமாவை சேர்ந்த விடுதலைப்போராட்ட வீரரான நரசிம்ம ரெட்டியை மையமாக வைத்து சிரஞ்சீவி எடுத்துவரும் படத்தில் அமிதாப்,சிரஞ்சீவி,நயன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கிறார்கள் என்பது ஆந்திர பேனாக்கள் சொல்கிற சேதி.
இதில் அமிதாப் நீண்ட தாடி ,தலை முடியுடன் விக் வைத்து நடிக்கிறார்.
‘நான் இம்மாதிரிஎல்லாம் ஜடாமுடி வைத்து நடிக்க மாட்டேன்’ என்பது முன்னர் ஜி அறிவித்திருந்த கொள்கை முடிவு! கொள்கை முடிவுகளை தலைவர்களே குழி தோண்டி புதைக்கிற காலத்தில் தாடி மீசை உறுதி எல்லாம் தூசு சார்!
அது சரி ! வேடப் பொருத்தம் எப்படி இருக்கிறதாம்?
“சூப்பர். இமாலயாவில் எனக்கு நிரந்தரமான இடம் கிடைக்கிற அளவுக்கு அமர்க்களமாக இருக்கிறது.என்ன சிக்கல் என்றால் தாடியும் தலைமுடியும் போதுமடா சாமி என்கிற அளவுக்கு நரக வேதனையாக இருக்கிறது” என ட்வீட் பண்ணியிருக்கிறார் ‘பிக் பி’