விவின் மூவி பட நிறுவனம் சார்பாக எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவணமாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ வெத்து வேட்டு “ என்று பெயரிட்டுள்ளனர். ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘விழா ‘பட நாயகி மாளவிகாமேனன் நடிக்கிறார்.இப்படத்தின்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.மணிபாரதி. படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…. ஒருவன் சொல்கிற பொய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாள் அதே பொய் அவனை தாக்கும் போது ஏற்பட்ட விளைவுகளை அவன் சந்திக்க வேண்டும் என்கிற கருத்தை இதில் கதையாக்கி இருக்கிறோம்.
வெத்து வேட்டு படத்திற்காக மாளவிகா மேனனிடம் பேசி கதை சொல்லி ஓ.கே. வாங்கி விட்டோம். அட்வான்ஸும் கொடுத்து விட்டோம். நல்ல கதை என்று சந்தோஷமாக சொன்ன மாளவிகா மேனன் படப்பிடிப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நான் நடிக்க மாட்டேன். நான் ஏற்கனவே ‘விழா’ படத்தில் நடித்திருந்தேன் என்னை “ ‘விழா’ மாளவிகா மேனன்” ன்னு சொல்றாங்க. வெத்து வேட்டு படத்தில் நடித்தால் ‘வெத்து வேட்டு’ மாளவிகா மேனன்னு சொல்லுவாங்க அதனால நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.
எங்களுக்கு என்ன செய்யறதுன்னே புரியல. அப்புறம் ஹரீஷ் பேசி சமாதானம் செய்து, பெரும்பாலும் ஆம்பளைங்களைத் தான் வெத்து வேட்டுன்னு சொல்வாங்க, பொண்ணுங்களை சொல்ல மாட்டாங்கன்னு சமாதானம் சொல்லி நடிக்க வைத்தோம். படத்தை பார்த்து விட்டு டைட்டிலை மட்டுமே யோசிச்சி நல்ல படத்தை இழந்திருப்பேன் என்று சொன்னார். எப்படியோ ,வில்லங்கம் இல்லாமல் படப்பிடிப்பு முடிந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.என்கிறார்.