27 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் சூப்பர்ஸ்டார் படம் யு/ஏ வாங்கி இருக்கிறது. மணிரத்னத்தின் தளபதிக்கு பிறகு பா.ரஞ்சித்தின் ‘காலா’படம் மைனர் வெட்டுகளுடன் 27-ம் தேதி வெளியாகும் என சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் வெளிவருமா, திரையிட விடுவார்களா மற்றவர்கள்? வரிசைப்படிதான் வரவேண்டும் என்று கட்டையைப் போட்டால் நடக்குமா? அதிலும் ரஜினி படம்,தியேட்டர்காரர்களுக்கு பாதாம் அல்வா மாதிரி! ஐநாக்ஸ்,பிவிஆர் தியேட்டர் குழுமங்களை கட்டுக்குள் கொண்டுவருவது கோணிப்பைக்குள் குட்டி யானையை கட்டிவைக்கமுடியாத வேலை என்கிறார்கள்.!அண்டை மாநிலங்களிலும் இவர்களுக்கு தியேட்டர்கள் இருக்கிறது. கியூப் பிரச்னையில் பெரும் சவாலாக இருப்பது குழுமங்கள் இவர்கள்தான் என்கிறார்கள்.
மணமேடைக்கு போகிற நேரத்தில் மாப்பிள்ளைக்கு வயிற்றோட்டம் வந்த கதையாகி இருக்கிறது திரை உலகத்தில்! சரி மாப்பிள்ளைக்கு ‘அடைப்பு’ மருந்து கொடுத்து சரி பண்ணினால் பெண்ணுக்கு காய்ச்சல்.என்ன பண்ணுவார்கள்?
தயாரிப்பாளர்கள் சங்கம் ‘க்யூப் ‘சிக்கலை விடுவதாக இல்லை. அவர்களும் இன்று இறங்கி வந்துவிட்டார்கள். தியேட்டர்காரர்கள் அடம் பிடித்தாலும் விஷாலின் கையில் அவர்களைப் பற்றிய முழு டேட்டா இருக்கிறது. ஆகவே இன்றைய நிலவரப்படி 13-ம் தேதிக்குப் பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள்.
நல்லது நடந்தால் சரி!