தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது, ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டுவதற்காக, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பொருட்டு ஒரு விரிவான சந்திப்பை இன்று (14/05/2018) அனைத்து அமைப்புகளும் கலந்து விவாதித்தோம்.அதன் அடிப்படையில்,அனைத்து விவசாய அமைப்புகளின் ஆலோசனைப்படியும்,பிற வல்லுனர்களின் வழிகாட்டுதல்படியும்,காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை “ காவிரிக்கான தமிழகத்தின் குரல்” என்கிற தலைப்பில் களம் காணவும்,போராட்ட ஒற்றுமையை உருவாக்கவும் விரும்புகிறோம்.அதற்கான முதல் கூட்டம் வருகின்றம் மே மாதம் 19 ம் தேதி காலை 10.00 மணி அளவில் சென்னை மெட்ரோ மேனர் ஓட்டல்,97, சிடன்ஹேம்ஸ் சாலை, நேரு அரங்கம், நுழைவாயில் எண் 4 ,எதிர்புறம்,பெரியமேடு சென்னை- 600003 என்கிற முகவரியில் நடைபெறும்.
“காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக இருந்து நமது குரலை நாட்டிற்கே எடுத்துரைக்கும் வகையில் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.