
நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசியதாவது:ரஜினி மக்கள் மன்றத்தில் பதவிகள், பொறுப்புகள் தங்களுக்கு இல்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். ரஜினி மக்கள் மன்றத்தில் மட்டும் 20 லட்சம் பதவிகள் உள்ளன. பூத் கமிட்டி உறுப்பினர் வரை பதவிகள்தான். தலைவர் கட்சியில் கடைகோடி தொண்டனும் தலைவராகலாம். தலைவர் தன்னை தொண்டர்களில் ஒருவராகப் பார்ப்பவர். யாரையும் பெரிய பொறுப்பில் அமர வைத்துப் பார்ப்பவர் அவர். எனவே பதவி குறித்து கவலைப்படாமல் கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
நமது இலக்கு 2 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பது அல்ல. ஐந்தரை கோடி வாக்காளர்களையும் நமது கட்சியின் ஆதரவாளர்களாக்குவது.
இப்போதே 150 தொகுதிகளில் தலைவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது, அவர்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு பிரபல நாளிதழே செய்தி வெளியிட்டுள்ளது. நமது இலக்கு 234 தொகுதிகளும்தான். ரஜினிகாந்த் ஆட்சிக்கு வந்தால் இந்த சிஸ்டம் மாறிவிடுமா? என்று கேட்கிறார்கள். நிச்சயம் மாறும். நூறு சதவீதம் அந்த ஆற்றல் தலைவருக்கு உள்ளது. அதற்கான திட்டங்களும் தயார். இன்று ரஜினி மக்கள் மன்றத்தினர் மாநிலம் முழுக்க, அறிவும் ஆற்றலும் இருந்தும் மேலே கல்வி பயில வாய்ப்பு இல்லாதவர்களைத் தேடித் தேடி உதவி வருகிறார்கள். தங்கள் சுய சம்பாத்தியப் பணத்தைக் கொடுத்து உதவுகிறார்கள். இதுதான் ரஜினியின் தொண்டர்கள். அவரது தொண்டர்களே களத்தில் இவ்வளவு செய்யும்போது, ரஜினி ஆட்சியில் கல்வி, மாணவர்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு கல்வி, வேலைவாய்ப்பில் மிகப் பெரிய புரட்சியை மக்கள் தலைவர் ரஜினிகாந்த் ஏற்படுத்துவார். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். அதே போல, நம் தலைவர் இந்தத் தமிழ்நாட்டுக்கு 5 ஆண்டுகள்தான் முதல்வர். அதன் பிறகு அவர் இந்த நாட்டின் பிரதமராகப் போகிறவர். காரணம், சரி செய்ய வேண்டியது தமிழகத்தின் சிஸ்டத்தை மட்டுமல்ல, இந்த நாட்டின் சிஸ்டத்தையும்தான்,” என்றார்.
