அரசியல்.சினிமா இரண்டையும் மதுரைதான் தீர்மானம் செய்யும் என்பார்கள். ரசிகர் மன்றங்களின் கருவறையே கூடல் மாநகரம்தான்.! எம்.ஜி.ஆர்.-சிவாஜி ஆகியோரின் மன்றங்களின் சண்டையும் இங்குதான் கிளம்பும். கமல்-ரஜினி ரசிகர்களின் கை கலப்பும் இங்குதான்! அத்தகைய மதுரையில்தான் சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’ படத்தின் இசை விழாவை நடத்துகிறார்கள். ஆக.3-ம் தேதி மிகப்பெரிய அளவில் நடக்கிறது.
24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் என்ன சொல்கிறார்?
“மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம். எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியும், இந்த முடிவுக்கு மிக முக்கியமான ஒரு காரணம். மேலும் இந்த படத்தின் மையக்கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம். ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா.