கடைக்குட்டி சிங்கம் பிளாக் பஸ்டர் சாதனை எட்டியதை வைத்து இன்று வெற்றி விழா -நன்றி அறிவிப்பு விழா நடந்தது. படத்தில் நடித்திருந்த பெருங்கூட்டம் கலந்து கொண்டு அரங்கினை கலகலப்பாக்கியது. சத்யராஜ் பேசும் போது சிரிப்பு செம தூக்கல். படத்தில் விவசாயத்தையும் கூட்டுக்குடும்பத்தையும் வலியுறுத்தி இயக்குநர் பாண்டிராஜ் கதை எழுதி இருந்தார். இதனால் தமிழகத்தின் சிறந்த 5 விவசாயிகளை மிகப்பெரிய அளவில் கவுரவித்தனர்.தலா 2 லட்சம் வீதம் வழங்கினார். இதை விட மிகப்பெரிய அறிவிப்பை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா வெளியிட்டார்.
“விவசாயத்தின் மேம்பாட்டுக்காக 1 கோடி ரூபாய் அளிப்பதாக ” அறிவித்தவர் அத்துடன் நின்று விடவில்லை. மேடையிலேயே காசோலையை கொடுத்து ” மேம்பாட்டுக்கான ஆய்வுகளைதனது அகரம் அறக்கட்டளை நடத்தி அதை முறைப்படி செயல் படுத்தும்”என்பதையும் சொன்னார்.
ஒரு தடவை நதி நீர் இணைப்புக்காக 1 கோடி தருவதாக சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.அதன் பின்னர் அந்த பேச்சையே காணோம். ஆனால் சூர்யா அறிவிப்போடு நின்று விடாமல் தொகையை வழங்கி அது சரியான முறையில் செயல்படுவதற்கான வழியையும் தனது அறக் கட்டளையே செய்யும் என அறிவித்தது நல்ல உதாரணம்.