டாக்டர் அம்பேத்கரின் மாணவர் டைரக்டர் பா.இரஞ்சித். இவரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ‘நீலம் புரொடக்சன்ஸ். ‘ இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் ‘பரியேறும் பெருமாள்.’ நெல்லை மாவட்டத்தை மையமாக வைத்து வரவிருக்கிற படம். முன்னணி இயக்குநரான ராமின் மாணவர் மாரி செல்வராஜ் முதலாவதாக இயக்கி இருக்கிற படம். இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியிடும் விழா இன்று நடந்தது. தயாரிப்பாளரான பா.இரஞ்சித் தனது கொள்கை இதுதான் என சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.தன்னை டாக்டர் , அம்பேத்கரின் மாணவர் என்பதாக பேச்சின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டு விட்டுத்தான் பேசினார்.
“சுயசாதிப் பெருமைகளைப் பேசுவதோ, மற்ற சாதி பெருமை பேசுவதோ கிடையாது. மனித சமுதாயத்தின் மாண்பு பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன்.இந்தியா சுதந்திரம் அடையும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அதற்கும் முன்னதாக , காலனி ஆதிக்கம் வருவதற்கு முன்னதாகவே அடிமைப் பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் ?”என்பதுதான் அம்பேத்கரின் கேள்வியாக இருந்தது. நான் நம்பி இருந்தவர்கள் கை விட்டுவிட்டார்கள்.நான் கஷ்டபட்டு முன்னுக்கு இழுத்து வந்த தேரை எனக்குப் பின்னால் வருகிறவர்கள் பின்னுக்கு இழுத்துவிட்டுவிடக்கூடாது என்றுதான் அம்பேத்கர் வருத்தப்பட்டார்.” என்று சொன்ன இரஞ்சித் “அந்த தேரை முன்னுக்கு இழுத்துச்செல்லும் வாய்ப்பை உண்டு பண்ணுவேன்.சாதி முரணை உடைப்பேன்”என்று உரத்த குரலில் சொன்னார்.
“என் மீது எவ்வளவோ அவதூறுகள். ஆனால் நேர்மையான விமர்சனக்களுக்கு பதிலைத் தேடிக்கொண்டிருப்பேன் .நான் நம்புகிற அரசியலுக்கு விரோதமாக இருக்க மாட்டேன்.உனக்கும் எனக்கும் இருக்கிற முரண்பாடுகளை உன்னிடம் பேசாமல் மூன்றாவது மனிதனிடமா பேச முடியும்? அம்பேத்கர் விட்டுச்சென்று இருக்கும் தேரை முன் இழுப்பதற்கான முன் முயற்சிகளை எடுப்பேன்.நான் நம்புகிற அரசியலை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முன்னேடுத்துச் செல்வேன்.”என்றார் பா,இரஞ்சித்.