வாழ்வியல் சார்ந்த படங்களை யதார்த்தம் பிறழாமல் சொல்லும் சிலரில் ராம் தவிர்க்கமுடியாத மனிதர். அவரது சீடர்தான் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர்.
தனது சீடனைப் பற்றி பெருமையாகச் சொல்கிறார்
“எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது.
ஒரு தனித்த பனிச்சாலை.
ஆளற்றசாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார்.
அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது.
இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது.
அந்தக்காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது.
அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித்.
அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும்.
அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.
மாரிசெல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார்.
திருநெல்வேலி என்றஊரையும் எனக்கு அறிமுகப் படுத்தியவன் மாரி செல்வராஜ். என் பாட்டன் அப்பன் வாழ்ந்த அந்த திருநெல்வேலிமண்ணில் உள்ள வீட்டில் என்னையும் என் மகனையும் அமர வைத்தவன் மாரிசெல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவன்.
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் இயக்குநர் ராம் என்றுஅடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன்.
கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கானஅந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின்அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும்பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.