தமிழர்கள் தங்களின் தாய் மொழியான தமிழில் கையெழுத்திடவேண்டும் என்பதற்குக்கூட ஒரு இயக்கம் வேண்டியதிருக்கிறது. .
இந்திய விடுதலைக்கு முன்னர் தமிழர்கள் அனைவரும் தமிழில்தான் கையெழுத்திட்டார்கள். ஆனால் ஆங்கிலேயன் நாட்டிலிருந்து வெளியேறியதும் அவனது மொழி நம்மை அடிமையாக்கிவிட்டது.
இந்த வருடம் 2018 ஜீன் மாதம் 30ம் நாள் வட அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின், மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்கம் இணைந்து 31வது தமிழர் திருவிழாவில் உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த சாதனையைக் கூட வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்தான் செய்திருக்கிறார்கள்.
இந்த முயற்சியை தமிழகத்தில் முன்னெடுத்து செல்லவிருக்கிறது நடிகர் ஆரியின் ‘ மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை’
அமெரிக்காவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, தனது கையெழுத்தையும் உலக சாதனைக்காக தமிழில் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
” என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும் அரசியல்வாதிகளும் மற்றும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும் “என்று ஆரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.