
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை – எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,கேரளா மாநிலம் எனக்கு வீடு போன்றது. இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ளும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்த அருமையான திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த நான் விரும்புகிறேன்.தற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவேன்.நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயல்படும். எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் செயல்படும். மக்கள் நல திட்டங்களுக்கும் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்.இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.