லிங்கா படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை வேந்தர் மூவீஸ் தராவிட்டால், அந்த நிறுவனம் தயாரித்துள்ள பாயும்புலி படத்தை வெளியிடத் தடை விதிப்போம் என பன்னீர் செல்வம் தலைமையிலான திரையரங்க உரிமையாளர் சங்கம் இன்று மாலை திடீரென முடிவு செய்துள்ளது. லிங்கா திரைப்படத்தை திரையிட்ட வகையில், நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுத்தியதால் ரஜினியும் ,தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் ரூ 12 கோடிக்கு மேல் கொடுத்தனர். இந்த நிலையில் லிங்கா தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. ரஜினியும் தனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கினார். இந்த சூழலில் லிங்காவின் வெளியீட்டாளரான வேந்தர் மூவீஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இப்போது விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பாயும் புலி என்ற படத்தைத் தயாரித்துள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தியன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லிங்கா படத்துக்கான நஷ்ட ஈட்டை தங்களுக்குத் தராவிட்டால், வேந்தர் மூவீசின் பாயும் புலி படத்தை வெளியிடத் தடை விதிப்போம் என்று ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடிய திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக பாயும் புலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது!