கதாசிரியர் கலைஞானத்தின் 75 ஆண்டுகால கலைத்துறையின் சேவையை பாராட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில், வைர விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் பாரதிராஜா, தலைமை தாங்கினார். தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது, ” கலைஞானம் அவர்கள்,போன மாசம் 9ஆம் தேதி,என்னை சந்தித்து, வர்ற 16ஆம் தேதி என் 90 ஆவது பிறந்தநாள். நீங்க வாழ்த்து சொல்லுங்க, அப்படின்னு கேட்டுகிட்டு , என்கிட்ட வாழ்த்து வாங்கினார். அப்புறம்,இயக்குனர் பாரதிராஜா எனக்கு பெரிய விழா ஏற்பாடு செய்திருக்கிறார். நீங்கள் அவசியம் கலந்துக்கணும். நீங்க இல்லைன்னா, இந்த விழா பூர்த்தியாகாது அப்படின்னு சொன்னார்.
அப்ப எனக்கு அந்த நாளில் சூட்டிங் பாம்பேல. இதனால, இல்லைங்க. எனக்கு அன்றைக்கு சூட்டிங் இருக்குன்னு சொன்னேன். அவரும்,இல்லங்க பாரதிராஜா உங்ககிட்ட பேசுவாருன்னு சொன்னார்.
அடுத்த நாள் பாரதிராஜாவுக்கு, நானே போன் பண்ணினேன். ‘என்ன தலைவரே எப்படி இருக்கீங்க? அப்படின்னு சொன்னாரு. எப்பவும் பாரதிராஜா என்னிடம் தனியாக பேசும் போது, ‘என்ன தலைவரே, அப்படின்னு தான் கூப்பிடுவார். அது வந்து என்னோட ரசிகர்கள், என் மீதான அபிமானத்தை கூப்பிடுற, ‘அந்த’ தலைவர் இல்லை. அதுவும் தனிடோன்ல கூப்பிடுவாரு.
என்னுடைய படம் வந்து, எந்த படம் நல்லா போனாலும், ஊ ரே வாழ்த்தி கொண்டிருக்கும் . அவர் என்கிட்ட சொல்வது இதுதான், ‘யோவ், பாட்டி வடை சுட்ட கதையை நீ பண்ணா கூட படம் ஓடுதுய்யா… அதுக்கு மேல, இன்னும் ஒன்னும் சொல்லுவாரு, ‘உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குய்யா’ அப்படிம்பாரு. எங்களோட நட்பு மிக ஆழமான நட்பு.
கருத்துரிமை எல்லோருக்கும் இருக்கு. அது நம்ம நட்புக்கு இடையே எப்பவுமே வராது. நம்ம நட்பு எப்பவுமே முடியாது. நம்ம. எவ்வளவோ பேரு. புகழ். பணம் சம்பாதிக்கலாம். சம்பாதிக்கவே முடியாதது, நண்பர்கள். அந்த பழைய நண்பர்கள் கிட்ட மட்டும் எந்த ஒரு மனஸ்தாபம் வந்தா கூட, உடனே கொஞ்சம் சரி பண்ணிகிட்டு போயிடனும். இல்லைன்னா ரொம்ப கஷ்டம் .அதுவும் வயசான பிறகு, பழைய நண்பர்கள் எப்படி கிடைப்பாங்க.
ஸோ , இந்த பாரதிராஜா சார் சொன்னாங்க, எம்ஜிஆர், சிவாஜி கணேசனுக்கு எல்லாம், விழா பண்ணினேன், உனக்கும் மதுரையில் விழா நடத்த போறேன்.
அப்புறம் நீ அரசியலுக்கு வந்த பிறகு கச்சேரிய வச்சுக்கிறேன்ன்னாரு .அது வேற, அப்படின்னு சொன்னாரு.
பாரதிராஜா தமிழ், கலை. இலக்கியம். பண்பாடு பேரவை நடத்திக்கிட்டு. பல நல்ல காரியங்கள் செஞ்சுகிட்டு. வர்றாரு. அதுல மிகவும் நல்ல காரியம், நம்ம கலைஞானத்துக்கு அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், மத்தியில் விழா நடத்துவது என்பது, எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது.
கலைஞானம் பற்றிப் பேசும்போது, சிவகுமார், பாக்யராஜ் கூட பேசினாங்க. சாண்டோ சின்னப்பா தேவர், எம்ஜிஆர் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருக்கும்போதே, ஒரு நாள் நீ கண்டிப்பா பெரிய நடிகராக வருவ, அப்ப நான் நீ நடிக்கிற படத்தை தயாரிப்பேன் என்று சொன்னாராம். அப்ப அவங்கள சுத்தி உள்ளவங்க எல்லாம் சிரிச்சாங்கலாம். ஆனா, சொன்ன மாதிரியே எம்ஜிஆர் மிகப் பெரிய ஹீரோவா ஆயிட்டாரு.சின்னப்பா தேவர், தாய்க்கு பின் தாரம் என்று அவரை வைத்து படம் தயாரித்தார்.
சாண்டோ சின்னப்பா தேவர் மிகப் பெரிய முருக பக்தர். அவரிடம் பேசி பழகும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடைசியாக அவர் தயாரித்தது என் படம் தான். தாய் மீது சத்தியம். என்கிட்ட அடிக்கடி அவர் சொல்வார், நான் உயிரை விட்டா சஷ்டி அன்னைக்கு வெள்ளிக்கிழமை, என் ஊரு கோயமுத்தூர்ல தான்விடுவேன் என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரியே, சஷ்டி அன்னைக்கு வெள்ளிக்கிழமை, கோவையில் உயிர்விட்டார்.
அவருடைய கதை இலாகாவில் பணியாற்றிய வர் தான் கலைஞானம், தூயவன், மாரா போன்றவர்கள். ஒரு தியேட்டரில் எப்பவுமே புதுசு புதுசா ஆங்கில படம் போடுவாங்க. இவங்க எல்லாம் அப்படி புதுசா வர்ற ஒவ்வொரு ஆங்கில படத்தையும் பார்ப்பாங்க.
இடைவேளையில் கூட யாரும் எதுவும் பேசிக்க மாட்டாங்க. அடுத்த நாள் காலையில, இவங்க எல்லாம் அந்த படத்தை பார்த்துட்டு, ஆளுக்கு ஒரு கதை சொல்வாங்க. ஆனா,இவங்க யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அஞ்சு பேரும், அஞ்சு கதை சொல்லி அதிலிருந்து ஒரு கதையை உருவாக்குவாங்க. அந்த மாதிரி கலையை ரசித்து, சிரித்து என்ஜாய் பண்ணி, நல்ல, நல்ல படங்கள் குடுத்தாங்க.
கதை ஆசிரியர்களுக்கு ஒரு சாபம். ஒரு படம் எவ்வளவு கோடி செலவழித்து, படம் எடுத்தாலும் அதில் நல்ல கதை இல்லை என்றால் அது போகாது. அப்படி ஒரு படத்தின் அஸ்திவாரமே கதை. ஆனா, அவங்களுக்கு ஒரு மரியாதை, அங்கீகாரம், சம்பளம் சரியா கிடைக்காது. அது அவர்களுக்கு சாபம் .ஏன்னு பார்த்தா, அவங்களுக்கு இதுவரை யாரும் உரிய அங்கீகாரம் கொடுக்கல. சினிமா டைட்டில் கார்டில் தயாரிப்பாளருக்கு அடுத்து, கதாசிரியரின் பெயர் போட்டு அவர்களுக்கு மரியாதை கொடுத்தீங்கன்னா, அவங்களுக்கு பெரிய மரியாதை வரும்.
கலைஞானம் கதை சொல்லும் பாணியே தனி. என்னை வைத்து முதன்முதலாக கதாநாயகனாக பைரவி படம் எடுத்தார். அதுக்கு எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளமே அவங்க மனைவி தாலியை வித்து தான் என்பது எனக்கு கடைசியா தான் தெரிந்தது.
படம் சூப்பர் ஹிட். தொடர்ந்து என்ன வச்சு அவர் பத்து படம் எடுத்திருக்கலாம். அவர் வரல. அவருக்கு கோபம் ஜாஸ்தி, தன்மானம் ஜாஸ்தி .ஆனா நான் தயாராகத்தான் இருந்தேன். அவரிடம் எப்படி இருக்கீங்க ன்னு கேட்டா நல்லா… இருக்கேன்னு இழுத்து சொல்வார். குழந்தை அழுதா தான், தாய் பால் கொடுப்பாங்க. அதுக்கு அப்புறம் அருணாச்சலம் படத்தில் ஏதோ ஒரு சின்ன உதவி என்னால் செய்ய முடிந்தது.
இப்ப சிவகுமார் சொன்னார், கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்று சொன்னாங்க, வருத்தமான விஷயம், கடம்பூர் ராஜுக்கு பெரிய மனசு .அவருக்கு வாழ்த்துக்கள். சி.எம். கிட்ட சொல்லி அவருக்கு வீடு வாங்கி கொடுக்கிறேன் சொன்னாங்க. நன்றி .அந்த வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு கொடுக்க மாட்டேன். அவர் உடம்பில் இருந்து மூச்சு வெளியே போகும்போது, என்னோட வீட்டுல இருந்து தான் போகணும். பாக்யராஜ் அவர்களே, நாளைக்கே அவருக்கு வீடு பாருங்க. நெக் ஸ்ட் அவர் சொந்த வீட்டில் தான் இருக்கணும். தேங்க்யூ சிவகுமார் சார், அவர் கேட்க மாட்டார். இது ஆண்டவன் மூலமா சிவகுமாரை வச்சு என்கிட்ட சொல்ல வச்சிருக்காரு. ரொம்ப ரொம்ப நன்றி இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் அவர் இருக்கணும்.என்று ரஜினி பேசினார்.












