
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.
ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,
“2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன்.
அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்பப்பட்டு இருவரும் இணைந்தோம்.
இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது.! ( அப்படின்னா ஸ்கிரிப்ட் ரொம்ப வெயிட்டா இருக்குமே சார்!) ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோது அவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். ( நல்ல வேளை,கல்யாணம் ஆகலியே!) இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.
கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, 
“நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர். நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார்.
நான் பாடல் எழுத வந்தபோது இசையமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார். அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரே இவர்தான்’ என்று என்னை அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார்.
இசையமைப்பாளர் தமன் பேசும்போது,
“நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லை. அவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம். அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மச்சான்! உனக்கு நான் நல்ல பாட்டாவே கொடுப்பேன்டா!
இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது. வெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது, இவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித்தது.
அச்சமயத்தில் ஞானவேல்ராஜா சார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன்.
ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். இந்துஜா, மகிமா மற்றும் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார்.
நடிகர் ஆர்யா பேசும்போது,
“இந்தப் படத்தின் டீஸருக்கும், காட்சி முன்னோட்டத்திற்கும் கிடைத்த ரெஸ்பான்ஸ், எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
சாந்தகுமாரிடம் ‘இந்தப் படத்தின் கதையைத் தயார் செய்ய எதுக்கு எட்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க?’ என்று கேட்டேன்.
அதுக்கு அவர் ‘ஞானவேல்ராஜா சார்கிட்ட அட்வான்ஸ் வாங்கி அதுல ஒரு பைக் வாங்கினேன்.அந்த பைக்லயே இந்தியாவைச் சுத்திப் பார்க்க போயிட்டேன். இப்போ அடுத்து சைக்கிளும் வாங்கப் போறேன்’னாரு.. ‘ஒரு பைக் வாங்கியே அடுத்தப் படத்தைத் தயார் செய்ய எட்டு வருஷமாச்சுன்னா.. அடுத்து சைக்கிள் வாங்கினா என்னா ஆகும்.. நீங்க அடுத்து பிளைட்டுதான் சார் வாங்கணும்’னு சொன்னேன்.
இந்தப் படத்தின் முழுக் கதையையும் சாந்தகுமார் என்னிடம் சொல்லவில்லை. முதலில் ‘மகா’ கதாபாத்திரத்தின் பகுதியை மட்டுமே சொன்னார்.
பிறகு ‘முனி’ கதாபாத்திரத்தை கடைசியாக உங்களிடமிருந்து வெளிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
இயக்குநர் சாந்தகுமார் மிகுந்த அர்ப்பணிப்புத் தன்மையுடைய இயக்குநர். அது எப்படியெனில் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருக்குமே ஒரு வரலாற்றையே தயார் செய்து வைத்திருந்தார்.
இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்தமைக்காக இயக்குநர் சாந்தகுமார் ஸாருக்கு எனது நன்றிகள்.
இயக்குநர் சாந்தகுமார் பேசும்போது,
“ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும்போது எவ்வளவு நேரம் வேலை செய்தோம்ன்றது எல்லாருக்குமே தெரியும். ஆனால் இது மாதிரியான ஸ்கிரிப்ட் வேலை செய்யும்போது அப்படியிருக்க முடியாது.
இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையும் அதில் கலந்திருக்கிறது. இதனால் எனது மனைவிக்கும், தயாரிப்பாளருக்கும் மட்டும்தான் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியும்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸார்கிட்ட அவ்வப்போது ஸ்கிரிப்ட் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இந்த நிறுவனத்தை நான் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் அது ஞானவேல்ராஜா ஸாருக்காகத்தான். அவர் எந்தவிதமான அழுத்த்த்தையும் எனக்குக் கொடுக்கவில்லை.
அவர் அவ்வப்போது ‘ஸ்கிரிப்ட் வேலை முடிஞ்சிருச்சா?’ என்று கேட்பார். நான் ‘இல்லை’ என்பேன். அவர் அதற்கு வருத்தமும் பட்டதில்லை.
அவர் என்னிடம் காட்டிய பொறுமையும் புரிதலும் என்னை நெகிழ வைத்தது. எனக்குக் கிடைத்த இந்தக் குழு மிகச் சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.”என்றார்.












