தில்லியின் பீரா கார்ஹி பகுதியில் இருந்த தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென கட்டடத்துக்குள் மிகப் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதை அடுத்து, கட்டடமே இடிந்து விழுந்து தரைமட்டமானதில், அதில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று காலை 4.23 மணியளவில், உதோ நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென, கட்டடத்துக்குள் இருந்து மிகப் பயங்கரமாக வெடிச்சத்தம் கேட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் கட்டடத்துக்குள் தீயணைப்பு வீரர்கள் உட்பட ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.