கதை :செவன் ஆட்ஸ் ,இயக்கம் :சச்சின் ரவி.,ஒளிப்பதிவு :கரம் சாவ்லா. இசை :அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜ் , காலை :உல்லாஸ் ஹேதுர்
ரக்ஷித் ஷெட்டி ,சான்வி ஸ்ரீவத்சவா ,பாலாஜி மனோகர் ,பிரமோத் ஷெட்டி .
*************
குவாண்டின் டாரண்டினோ,இன்டியானா ஜோன்ஸ் போன்ற படங்கள் பார்த்தவர்களுக்கு இந்த படத்தின் கலர் எதை சார்ந்து வரும் என்பது தெரிந்திருக்கும். கவ் பாய் ஸ்டைல் படங்களுக்கு இந்த சிபியா டோனை பயன் படுத்துவார்கள். அவனே ஸ்ரீ மன் நாராயணா படமும் மேற்சொன்ன படங்களை போன்றதுதான். படத்தின் பெயரைப் பார்த்து வெங்கடாசலபதியை பற்றிய படமாக இருக்கும் என நினைத்து விடாதீர்கள். புராணப்படம் அல்ல.
இது பீரியட் படம் மாதிரியும் இருக்கும்,சமூகப்படம் மாதிரியும் இருக்கும்.இரண்டும் கலந்த கலவையாகவும் தெரியும். முதலில் மூணு மணி நேரத்துக்கும் சற்று அதிகமாக உட்கார்ந்திருக்க வேண்டும் என்பதால் அதற்கான டிபன் வகையறாக்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதிகமாக சிந்தனை செய்யாமல்,உங்களின் லாஜிக் புத்தியை கழட்டி வைத்து விடுங்கள். அவனே ஸ்ரீமன் நாராயணா .!
ஒரு நாடக கம்பெனி பெரும் புதையலை கடத்திக் கொண்டு வந்துவிட்டதாக ஏழுமலைகளுக்கு எஜமானன் ராமராமா நினைத்துக்கொண்டு அந்த டிராமா கம்பெனியை அவனது கஸ்டடியில் வைத்து சித்ரவதை செய்கிறான். இவனது பொண்டாட்டிக்கு பிறந்தவன் ஜெயராம் . வேலைக்காரிக்கு பிறந்தவன் துக்காராம் . வப்பாட்டிக்கு பிறந்த மகனை ஜெயராம் போட்டுத்தள்ளினாலும் தள்ளிவிடுவான் என பயந்து அப்பன்காரன் சத்யம் வாங்கிக்கொண்டு மண்டையை போட்டுவிடுகிறான். “எந்த நிலையிலும் தம்பி துக்காராமை போட்டுத் தள்ளிவிடாதே!”செத்துப்போன அப்பனின் நாற்காலியை பிடிப்பதற்காக ஜெயராம்,துக்காராம் இருவரும் தனித்தனியாக சதிகளில் இறங்குவது தனி சப்ஜெக்ட்.
ராமராமா கோட்டைக்குள் ஹீரோ இன்ஸ்பெக்டர் ரக்ஷித் ஷெட்டி புகுந்ததும் ,கூடவே கதாநாயகி சான்வியும் நுழைந்து விடுவார். டூயட் பாட அல்ல .சண்டை போட.! சங்கேத வரிகளை வைத்து புதையலை அடைவதற்கு மூன்று கோஷ்டிகளும் போடுகிற சண்டைதான் படம் முழுமைக்கும்.! நாடக கோஷ்டி தப்பியதா, புதையல் கிடைத்ததா, நாற்காலி சண்டை என்னாச்சு என்பதுதான் கதை.
ஆர்ட் டைரக்டர் உல்லாஸ் ஹேதுர் கடுமையாக உழைத்திருக்கிறார். போட்டிருக்கிற கோட்டை செட், பழைய காலத்து தர்பார் மண்டபம் மாதிரியான அரங்கம் ,பார்,எல்லாமே அட்டகாசம். காஸ்ட்யூம்ஸ் சூப்பர். கதாநாயகனுக்கு படம் முழுவதும் ஒரே டிரஸ்தான். கடைசியில் குர்தா போட்டிருப்பார். கரம்சாவ்லாவின் கேமரா எந்த இடத்திலும் போட்டிருப்பது செட்டுதான் என்கிற உணர்வை ஏற்படுத்தவில்லை. கடுமையாக உழைத்திருக்கிறார்கள். உழைப்புக்கேற்ற வரவேற்பு கிடைக்குமா?
குலுங்க குலுங்க கதாநாயகிகளை பார்த்த கண்களுக்கு வறண்ட காவிரி மாதிரி கதாநாயகி ! படத்தில் இவருக்கு பெரிய வேலை இல்லை என்பதால் கொத்தவரங்காய் மாதிரியான நடிகையை போட்டிருக்கிறார்களோ என்னவோ!
வைகுண்ட ஏகாதசி ,மகா சிவராத்திரி போன்ற தூங்கா விரத நாட்களுக்கு உரிய படம் .
இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் என்கிறார் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி.
தமிழ்நாட்டில் எப்படி?
நம்ம சினிமா முரசத்தின் மதிப்பு 2 1/2 / 5. உழைப்புக்கு மட்டுமே !