எழுத்து இயக்கம் : பி.சமுத்திரக்கனி ,ஒளிப்பதிவு :என்.கே.ஏகாம்பரம் , இசை :ஜஸ்டின் பிரபாகரன் ,பாடல்கள் :யுகபாரதி ,லோகன் .
எம்.சசிகுமார் ,அஞ்சலி ,பரணி ,அதுல்யா,நமோ நாராயணன் ,ஞானசம்பந்தம் ,துளசி
************
“மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை ; மனதை மாற்றிக் கொள்ள முடியாதவர்களால் மாற்றம் நிகழப்போவதில்லை ” என்பார் பேரறிஞர் பெர்னார்ட்ஷா .
ஆக எத்தனை காமராஜர்கள் ,பெரியார்கள்,அம்பேத்கார்கள் தோன்றினாலும் மனதை மாற்றிக்கொள்ள முடியாதவர்களாக மக்கள் ‘வளர்கிற’வரை சாதி மறுப்பு என்கிற மாற்றம் நிகழப்போவதில்லை. ஆகவே மனதை மாற்றுகிற முயற்சியாக வந்திருக்கிற படமாக நாடோடிகள் 2 வை இந்த விமர்சகர் கருதுகிறார்.
இதனால் பிரசார படமாக இருக்குமோ என்று எண்ணி விட வேண்டாம்.சிறந்த பொழுது போக்குப் படமாக எடுத்திருக்கிறார்கள். வணிக ரீதியாக படம் அமைந்திருக்கிறது.
“மகனுக்கு இவளாவது பொண்டாட்டியாக அமைய மாட்டாளா ?”என்கிற எதிர்பார்ப்புடன் சசிகுமாருக்கு மணமகள் தேடுகிற அம்மா துளசி.
“என்னை பிடிச்சிருக்கான்னு பொண்ணுக்கிட்ட கேளு.பிடிச்சிருந்தா கட்டிக்கிறேன் “என அம்மையிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பொது சேவையில் ஈடுபடுகிற சசிகுமார்.
மகளைக் கட்டிக் கொடுக்கமாட்டேன் என்று தாய்மாமன் ஞானசம்பந்தனே மறுத்துவிட்ட நிலையில் அதுல்யா ரவியை விரும்பிக் கட்டிக்கொடுக்கிறார்கள் உறவு வழிக்காரர்கள்.
அதனால் முதலிரவில் நடப்பதென்ன,சசிகுமார் எடுக்கும் முடிவு என்ன ,நிகழ்கிற மாற்றம் என்ன ? இடைவேளைக்குப் பிறகு அருவியாக பாய்கிறது .!கதைக்கு வலு சேர்க்கும் வகையில் திரைக்கதை அமைந்து விட்டால் இருக்கையை விட்டு அசைய முடியாமல் நம்மை கட்டிப் போட்டுவிடும்.அது உண்மை.
“பொதுநலம் இருக்கே ,மிகப்பெரிய கெட்ட பழக்கம்” என சலித்துக் கொள்கிற சசிகுமாருக்கு இந்த கதை சிறந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அவரும் திறமையை வெளிப்படுத்தி யிருக்கிறார்.அவரது பாணியில் காதல் ,பாசம், கோபம் ,ஆதங்கம் ,ஏக்கம் எல்லாமே சிறப்பு ,வெகு சிறப்பு.
சமுத்திரக்கனியின் வெகுஜன கோபம் வசனங்களாக வெளிப்பட்டிருக்கிறது. மனசாட்சி என்று பிம்பத்தைக் காட்டாமல் காமராஜர் பெரியார் உள்ளிட்ட புரட்சியாளர்களின் படங்களுடன் அலைகிற ஒரு கேரக்டர் வழியாக பேச வைத்திருக்கிறார் இயக்குநர் “ஊருக்குள்ள நெறய கோமாளிப்பயலுக திரியிறானுக .அவனுககிட்ட போயி மைக்க நீட்டு!” இது ஒரு சாமானியனின் ஆதங்கம்.கோபமென்றும் சொல்லலாம்.
“அஞ்சலி என்கிற டாக்டர் தோழர் இருக்கிறபோது சசிக்கு அதுல்யா ரவியை ஜோடி சேர்த்து வைத்திருக்கிறார்களே ” என்கிற ஆதங்கத்தை இயக்குநர் சாதுர்யமாக தவிர்த்து இருக்கிறார்.
அஞ்சலியா அது என்கிற ஆயிரம் கேள்விக்குறிகள் அந்த செங்கொடி கேரக்டரில்.! ஆர்ப்பாட்டம், சமூக கோபம் என பின்னியெடுத்திருக்கிறார் அஞ்சலி..
“நம்ம ரத்தத்தோட வேற ரத்தம் கலந்துறக்கூடாது” என சகுனிக்கு பாடம் எடுக்கிற அளவுக்கு அந்த உறவுக்கார பெண்ணாக வருகிறவர் கலக்கியிருக்கிறார். வித்தியாசமான வில்லி. வாழ்த்துக்கள்.
நண்பனாக பரணி.நல்ல மாறுதல் இருக்கிறது.
நமோ நாராயணனுக்காவே தேடிப்பிடிக்கப்பட்ட கேரக்டர்.தனி செல்பி ரகம்.
பார்க்கவேண்டிய படம்.
சினிமா முரசத்தின் மார்க் .3 / 5