விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ‘ரோகினி’ ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்விக்கு ‘ரோகினி’ ஆர்.பன்னீர்செல்வம் பதிலளிக்கையில்,
“கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.
அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையாக இருக்கிறது. இதன் மூலம் ரூ. 1500 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கும் ரூ. 25 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் ரூ.3000 கோடி இருக்கும் என்று கூறுகிறார்கள்.
திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்து விட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் வராத கொரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்?திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால் நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். விமானத்தில் அவ்வளவு நெருக்கமாகப் பயணம் செய்யும் போது வராத கொரோனா திரையரங்கில் மட்டும் எப்படி வந்து விடும் என்று நினைக்கிறார்கள்? அரசு திரையரங்கங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்யச் சொன்னாலும் அதை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழகஅரசைக் கேட்டுக் கொள்கிறோம் .அதற்கான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். “என்றார்.












