கம்பன் என் காதலன் .
கம்பன் விரித்துச்சொன்னதை சுருக்கி அழகான எடுத்துக்காட்டுகளுடன் ஒரு மணி நேரத்தில் ராமனின் பெருமைகளை சொன்னவர் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார்.
கம்பனை சொல்லிவிட்டோம் ,அடுத்த பெருங்காவியமான பாரதத்தை சொல்லாமல் விடலாமா?
பெருஞ்சவாலான விஷயம். எத்தனையோ கதாபாத்திரங்கள். அத்தனையும் அந்த காப்பியத்துக்கு அவசியமானவை. கிளைக்கதைகள் ஏராளம் .ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மறந்து விடக்கூடாது. கூர்மையான கத்தியின் மீது நடந்தாக வேண்டும். சற்றே தவறினாலும் காப்பியப்பிழை நிகழும் வாய்ப்பு.
ஆனால் பாரதவியாசரின் கருத்துகள் சிதையாமல் சீராக தொகுத்து துளி நீர் அருந்தாமல் பேசி முடித்துவிட்டார் சிவகுமார்.
எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அறவழியினை ஒன்னரை அடிகளில் 1330 குறள்களாக கொடுத்தவர் அய்யன் வள்ளுவர்.
பரிமேலழகர் ,மணக்குடவர்,,வ.சுப மாணிக்கம் ,பாவாணர், க.ப.அறவாணன்,கலைஞர் கருணாநிதி ஆகியோர் அந்த குறள்களை ஆய்ந்தறிந்து அவரவர் பாணியில் கருத்துரை ,அறவுரை ,விரிவுரை என சொல்லிவிட்டார்கள். காலத்தால் அழியாத அந்த கருத்துப் பெட்டகத்தில் எனதுரையையும் வைக்கிறேன் எனச்சொல்லி இருக்கிறார் சிவகுமார்.
“எனது வாழ்க்கையில் திருக்குறளை அரங்கேற்றம் செய்வதுதான் நிறைவினைத் தரும்” என்கிறார் சிவகுமார்.
எந்த நடிகரும் செய்யாதது.செய்யமுடியாதது. திரைத்துறையில் இருந்து இப்படி ஒரு வித்தகன் இனி பிறந்து வந்தால்தான் உண்டு. ஆனால் அப்படி ஒரு பெருந்தகை பிறந்து வருகிறபோது கலாசாரம் மாறிப்போயிருக்கும். அருஞ்சொற்கள் அற்றுப்போயிருக்கும். தமிழனின் அடையாளமே மாறியிருந்தாலும் வியப்பதற்கில்லை.
இதுவும் கடந்து போகும்.!